
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வசித்துவருபவர் மருத்துவர் கணேசன், இவர் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கடந்த 18 வருடங்களுக்கு முன்பு எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த நித்தியானந்தாவின் தீவிர சிஷ்யராக கணேசன் இருந்து வந்துள்ளார். நித்யானந்தா மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தனக்கு சொந்தமான கோதைநாச்சியாபுரம் கிராமத்தில் உள்ள நான்கு ஏக்கர் நிலத்தையும், சேத்தூர் மலையடிவார பகுதியில் உள்ள சுமார் 37 ஏக்கர் நிலத்தையும் சுவாமி நித்தியானந்தர தியான பீடத்திற்கு தானமாக வழங்கியுள்ளார்.
இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் நித்யானந்தா சிக்கியதால், மருத்துவர் கணேசன் தானமாக வழங்கிய இடத்திற்கான பத்திரப்பதிவை ரத்து செய்து 40 ஏக்கர் நிலத்தை மீட்டுத் தருமாறு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் தனது நிலத்தினை மீட்கும் பொருட்டு அந்த நிலத்தின் பவர் ஏஜென்ட்டாக திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவருக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவு வரும் வரை பவர் ஏஜென்ட் சந்திரன் நிலத்திற்க்கு உரிமை கொண்டாடக்கூடாது… நித்தியானந்தாவின் ஆசிரமமும் செயல்படக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் அங்கு ஆசிரமம் கட்டி வாழ்ந்து வரும் சிஷ்யர்களை வெளியேறச் சொல்லியும் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து நித்யானந்தா சிஷ்யைகள், சீடர்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென வந்த நித்யானந்தாவின் சிஷ்யர்கள் ஆசிரமத்திற்குள் சென்று தங்கிக் கொண்டனர். இதை அறிந்த போலீசார், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் ஆசிரமத்திற்கு நேரில் சென்று அவர்களை வெளியேறுமாறு தெரிவித்துள்ளனர்
ஆனால், சிஷ்யைகள் ஆசிரமத்தை விட்டு வெளியேற மாட்டோம் எனக்கூறி அறைகளை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்குள் இடத்தை காலி செய்யாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றுள்ளனர். தாசில்தார் மற்றும் காவல்துறையினர் கொடுத்த கெடு நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து தாசில்தார் ராமசுப்பிரமணியன் மற்றும் ராஜபாளையம் டிஎஸ்பி பிரீத்தி தலைமையிலான போலீசார் ஆசிரமத்திற்கு சென்று அங்கு தங்கியிருந்த சிஷ்யைகளை வெளியேற்றினர்.

இந்நிலையில் இரவு 12 மணி அளவில் சேத்தூர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உள்ள ஆசிரமத்திற்கு மீண்டும் சென்ற சிஷ்யைகள், சீல் வைக்கப்பட்டிருந்த பூட்டினை உடைத்து உள்ளே சென்றுள்ளனர் மேலும், இருட்டான அறைக்குள் அமர்ந்தவாறு சிவலிங்கத்தினை கட்டிப்பிடித்து நித்தியானந்தருக்கும் தங்களுக்கும் அநீதி நடந்ததாக கூறி பெரும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இதனை அறிந்த சேத்தூர் போலீசார் நள்ளிரவே ஆசிரமத்திற்கு சென்று அங்கிருந்த சிஷ்யைகளையும், சீடர்களையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். நித்யானந்தா எங்கே இருக்கிறார் என்றே தெரியாத நிலையில், அடுத்தவர் நிலத்தை அபகரிப்பதற்காக அவரது சிஷ்யைகள் அரங்கேற்றிய நாடகம் ராஜபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.