தமிழக அரசியலில் பழனி தொகுதி எப்போதுமே ஒரு முக்கிய மையப்புள்ளி. ஆனால், இந்த முறை அங்கு வீசும் காற்று வழக்கத்திற்கு மாறாக இருக்கிறது. “யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆனால் கம்யூனிசம் மட்டும் வேண்டாம்” என முழங்கும் பழனி இளைஞர்களின் பின்னணி குறித்த ஒரு கள ஆய்வு.
பழனி சட்டமன்றத் தொகுதியில் ரௌடியிசம் பரவாயில்லை, காம்ரேட் மட்டும் வேண்டாமென அந்த தொகுதி மக்கள் பரவலாக பேசி வருகின்றனர். குறிப்பாக பழனி தொகுதியில் இளைஞர்கள் மத்தியில் ஒரு வினோதமான, உறுதியான குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் டீக்கடைகளிலும் ஒரு பேச்சு பலமாக அடிபடுகிறது. “இந்த தொகுதிக்கு யார் வேண்டுமானாலும் எம்.எல்.ஏ-வாக வரட்டும். ஒரு ரௌடியோ அல்லது கனிமவளக் கொள்ளையனோ கூட வெற்றி பெற்றுப் போகட்டும். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் காம்ரேடுகளை (கம்யூனிஸ்டுகள்) மட்டும் உள்ளே விடமாட்டோம்” என்பதுதான் அந்த அதிரடி முடிவு.
பழனி தொகுதி இளைஞர்கள் ஏன் இந்த ஆவேசப்படுகின்றனர்.? – அந்தப் பகுதியின் இளைஞர்களின் வாதம் என்னவென்பதை அப்பகுதி இளைஞர்களிடம் நாம் உரையாடியபோது, அவர்களின் ஆவேசத்திற்குப் பின்னால் ஒரு தீர்க்கமான பயமும், தெளிவும் இருப்பதை உணர முடிந்தது. “கம்யூனிஸ்ட் ஆட்சி அல்லது அவர்களின் ஆதிக்கம் ஓரிடத்தில் வந்தால், அவர்கள் செய்யும் முதல் வேலை தொழிலாளர் உரிமை என்ற பெயரில் வேலைநிறுத்தங்களை தூண்டிவிடுவதுதான். ஊதிய உயர்வு கேட்டுப் போராடி, கடைசியில் வேலை கொடுக்கும் கம்பெனிகளையே இழுத்து மூடிவிடுவார்கள்,” என்கின்றனர்.



































































































