குஜராத்தில் 2021 உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தைக் காட்டிய ஆம் ஆத்மி, அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஐந்து இடங்களை வென்று இன்னும் பலமாக காலூன்றியது. ஆனால், அதற்குப் பிறகு ஆம் ஆத்மி மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக அது வலுவிழக்கத் தொடங்கியிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதன்படி பார்க்கப்போனால், கடந்த ஆண்டு டெல்லியை பாஜகவிடம் இழந்த ஆம் ஆத்மி, தற்போது பஞ்சாபில் மட்டுமே எஞ்சியுள்ளது. கோவாவில், ஆம் ஆத்மி கட்சிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இந்த முடிவுகள் இரண்டு அம்சங்களைச் சுட்டிக்காட்டுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒன்று, குஜராத்தில் அதன் அடிமட்ட பலம் குறைந்து வருகிறது. மற்றொன்று, தனது ஆதரவாளர்களை அக்கட்சி ஒன்றுசேர்த்து வைத்திருக்க இயலாதது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். இது குஜராத்தைப் பற்றியது மட்டுமல்ல… பஞ்சாபையும் கவனத்தில் கொள்ளக்கூடியது. அங்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக அக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் வெளியேறி வருகின்றனர். 2024-இல், அல்பேஷ் கதிரியா மற்றும் தர்மிக் மாலவியா ஆகியோருடன் தொடங்கிய பயணம், அதே ஆண்டில், பூபேந்திர பயானி மற்றும் 2025-இல், உமேஷ் மக்வானா வரை நீடித்தது. தொடர்ந்து தற்போது அது வேகம் பிடித்துள்ளது.
அதில் குறிப்பிடத்தகுந்த மாற்றமாய் சமீபத்தில் அரங்கேறிய நிகழ்வு. சமீபத்தில் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்பிக்களில் ஆறு பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இது ஆம் ஆத்மி கட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்துவதாக உள்ளது. மேலும், இந்த ஏழு பேரில், பஞ்சாபில் கட்சி தனது முதல் அரசாங்கத்தை அமைப்பதில் முக்கியப் பங்காற்றியவர்கள் சந்தீப் பதக் மற்றும் ராகவ் சதா ஆகியோரே ஆவர். ஆம் ஆத்மியின் கூடாரம் நாளுக்கு நாள் காலியாகிவருவதால், அதன் பின்னணியில் பாஜக இருப்பதாக அக்கட்சி குற்றம்சாட்டுகிறது. அதேநேரத்தில், அடுத்த ஆண்டு இரண்டு மாநிலத் தேர்தல்கள் நடைபெறும் இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி அழுத்தமான அஸ்திவாரத்தை அமைக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.




































































































