2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவது யார்.? என்ற கோதாவில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு, கோடை வெயிலை காட்டிலும் இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது போல கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயம்புத்தூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் களம் படு சூடாகவே இருக்கிறது. அதே நேரத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரிய கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் களத்தை சந்தித்துக் கொண்டு வருகின்றனர்.
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும், திமுகவில் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதால் எப்படியாவது அவரை தோற்கடிக்க வேண்டும் என வேலுமணி கங்கணம் கட்டிக்கொண்டு தொண்டர்களை முடுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். வேலுமணியின் ஏவுகணை தாக்குதல்களை முறியடிப்பதற்காக கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜியும் தனது கரூர் சகாக்களுடன் தொகுதியில் பல்வேறு மோடி மஸ்தான் வேலைகளை செய்து வருகிறார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அலசி ஆராய்ந்து பார்த்த பொழுது கொங்கு மண்டலம் எனது கோட்டை என்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி கூறி வருவது நாளுக்கு நாள் சட்டமன்ற தொகுதிகளில் எதிரொலித்துக் கொண்டு வருகிறது.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் தேர்தலில் நிற்கா விட்டாலும், ஏன் நிற்கவில்லை என அவரது ஆதரவாளர்களிடம் கேட்ட பொழுது, அதிமுக தலைமை 20 சி கேட்டதாகவும் அதற்கு செல்வராஜ் இல்லை என்று கூறியதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஓ.கே, சின்ன ராஜுக்கு அதிமுக தலைமை சீட்டு ஒதுக்கியதாம். திமுக சார்பில் கடந்த முறை போட்டியிட்ட டி.ஆர். சண்முக சுந்தரத்திற்கு இந்த முறை சீட்டு மறுக்கப்பட்டு, கவிதா என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சுனில் ஆனந்த் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் கோபாலகிருஷ்ணன் என்பவரும் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.

மேட்டுப்பாளையம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஓகே சின்ராஜ் தனது படை பரிவாரங்களுடன் தேர்தல் களத்தில் இன்ச் பை இன்சாக சந்தித்து வருவதால், இரட்டை இலை வெற்றி தந்த இலையாக மாறும் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் மேட்டுப்பாளையம் பொது ஜனங்கள். அதே நேரத்தில் திமுக வேட்பாளரான கவிதாவின் தேர்தல் சறுக்கலில் ஒரு அங்கமான டி.ஆர். சண்முகசுந்தரம் என்பவருக்கு மறுபடியும் திமுகவில் சீட்டு தரவில்லை என்ற காரணத்தினால் தற்போது அவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதனால் திமுக வேட்பாளர் கவிதாவின் வெற்றி என்பது குதிரை கொம்பாக தான் இருக்கிறது. தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளரான சுனில் ஆனந்த் போட்டியிடுவதால் இவர் டெபாசிட் வாங்குவது கடினமான சூழ்நிலையாக உள்ளதாம். மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளரான ஓ.கே. சின்ராஜ் கரை சேருவார் என்று தெரிகிறது.

சூலூர் சட்டமன்ற தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. வான கந்தசாமி மறுபடியும் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பில் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் என்பவர் போட்டியிடுகிறார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சுகுமார் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜசேகரன் மற்றும் பல சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.

சூலூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை கந்தசாமி பல்வேறு வேலைகளை செய்து தந்திருப்பதால் சூலூர் தொகுதி மக்களிடம் நன்கு பரிச்சயமானவர். சூலூர் தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற கந்தசாமி மறுபடியும் இரட்டை இலையை தக்க வைத்து விடுவார் என்று நம்மிடத்தில் சத்தியம் செய்யாத குறையாக கூறுகிறார்கள் சூலூர் தொகுதி பொதுமக்கள். அதே நேரத்தில் தளபதி முருகேசன் என்பவர் திமுகவில் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்தாலும் கூட வைட்டமின் ப இருந்தால் தான் எந்த வேலையாக இருந்தாலும் செய்வார் என்று அவருக்கு நெருங்கிய கழக உடன்பிறப்பு ஒருவர் நம்மிடத்தில் இத்த தகவலை கூறுகிறார். தேர்தலில் தளபதி முருகேசன் வெற்றி பெறுகிறாரோ.. இல்லையோ.? ஆனால் தனக்கு தேவையான வைட்டமின் ப வை கழக உடன்பிறப்புகளுக்கு தெரியாமல் தனியாக வசூல் செய்து வருவதாக உடன்பிறப்புகள் நம்மிடத்தில் தகவலை கூறுகிறார்கள். சூலூர் சட்டமன்ற தொகுதியில் தளபதி முருகேசனுக்கு திமுகவினர் சரிவர ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை சூலூர் தொகுதியில் திமுக வின் தோல்வி உறுதி என்று நம்மிடத்தில் கூறுகிறார் முக்கிய பதவியில் இருக்கும் கழக உடன்பிறப்பு ஒருவர்.

அதே நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சுகுமார் என்பவரும் நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜசேகரன் என்பவரும் போட்டியிட்டாலும் சூலூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை மண்ணின் மைந்தனாக அதிமுக வேட்பாளரான கந்தசாமியே சூலூர் தொகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார், அத்துடன் முன்னாள் அமைச்சர் வேலு மணியின் பார்வை சூலூர் தொகுதியில் இருப்பதால் எப்படியும் இரட்டை இலை வெற்றி பெற்று விடும் என்று கூறுகிறார் பெட்டிக்கடை வைத்திருக்கும் மூதாட்டி ஒருவர்.

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் அருண்குமார், காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷ், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளர் கனிமொழி, நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் கலாமணி மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் ஏற்கனவே முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான ஆறு குட்டியின் மகனான அசோக் என்பவருக்கு சீட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பேச்சுவார்த்தையில் காங்கிரஸுக்கு கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி ஒதுக்கீடு செய்ததால் அசோக் போட்டியிட முடியாமல் போய்விட்டதாம்.

இதில் அதிமுக வேட்பாளரான அருண்குமார் மேற்கே உள்ள மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவைக்கினார். அத்துடன் பெரியநாயக்கன்பாளையம் நரசிம்மநாயக்கன்பாளையம், பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளரான அருண்குமாருக்கு கவுண்டம்பாளையம் தொகுதி மக்கள் ஃபுல் சப்போர்ட் செய்வதால் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை அதிமுக வேட்பாளர் அருண்குமார் முன்னிலை வகிக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷ் தொடர்ந்து வருகிறார். கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியை பொறுத்த அளவில் அதிமுக மற்றும் திமுகவிற்கு தான் கடுமையான போட்டி நிலவுகிறது. அதே நேரத்தில் சட்டமன்ற உறுப்பினரான அருண்குமார் தனது சமுதாய ஓட்டுக்களும் மற்றும் பிற சமுதாய ஓட்டுக்களும் ஈசியாக கிடைத்துவிடும் என்பதால் தைரியமாக வாக்காளர்களை சந்தித்துக் கொண்டு வருகிறாராம். கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் கரை படியாத கைக்கு சொந்தக்காரர் என்று அதிமுக வேட்பாளர் அருண்குமார் தனது பெயரை தக்க வைத்திருப்பது இவருக்கு கூடுதல் பலம் என்று கூறுகிறார்கள் நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர்.
கவுண்டம்பாளையம் தொகுதியை கூட்டி கழித்து பார்த்தால் அதிமுக வேட்பாளரான அருண்குமார் வெற்றி பெறுவதில் எந்தவித சந்தேகமில்லை.!
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் செந்தமிழ் செல்வன் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவருக்கு அடுத்தபடியாக வானதி சீனிவாசன் பி.ஜே.பி. வேட்பாளராக போட்டியிடுகிறார். தமிழக வெற்றி கழகத்திலிருந்து சம்பத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் நர்மதா என்பவர் வேட்பாளராக போட்டியிடுகின்றனர். கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை கடந்த தேர்தலில் வடவள்ளி சண்முகசுந்தரம் என்பவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அதே நேரத்தில் இந்த முறை சண்முகசுந்தரத்திற்கு தேர்தல் சீட் நோ சொல்லிவிட்டு கோவை மாநகர மாவட்ட திமுக செயலாளர் செந்தமிழ் செல்வனுக்கு சீட்டு தரப்பட்டது. கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் பிஜேபி வேட்பாளர் வானதி சீனிவாசன் என்னதான் அதிமுகவினரின் ஆதரவோடு களத்தில் நின்றாலும் இவர் வெற்றி பெறுவாரா.? என்பது சந்தேகமே என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் அதிமுகவினர் சிலர். திமுக வேட்பாளரான செந்தமிழ் செல்வன் புதிய முகமாக இருந்தாலும் கட்சிப்பணி ஆற்றுவதில் சுறுசுறுப்பான உடன்பிறப்பாம்.! இவரது தேர்தல் செலவையும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்துக் கொண்டு வருவதால் கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தற்போதைய நிலவரப்படி ஓடி வருகிறான் உதயசூரியன் என்ற கோஷம் வானுக்கும் பூமிக்கும் எதிரொலித்துக் கொண்டு வருகிறது.

அத்துடன் பிஜேபி வேட்பாளரான வானதி சீனிவாசன் அதிமுக கூட்டணி கட்சியினருடன் போட்டியிட்டாலும் அக்கா தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் வடநாட்டு பிஜேபி தலைவர்களின் பேச்சை தமிழாக்கம் செய்து பேசி வருகிறாராம். என்னதான் வானதி வானுக்கும் பூமிக்கும் தாண்டவம் ஆடினாலும் வடக்கு தொகுதியில் நீந்தி கரை சேருவது சற்று கடினம் தான் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் வடவள்ளி பகுதியைச் சேர்ந்த கழக உடன்பிறப்புகள் சிலர்.
தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் சம்பத்குமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நர்மதா ஆகிய இருவரும் தங்களது பங்குக்கு கணிசமான வாக்குகளை பிரிப்பார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் ஓடி வருகிறான் உதயசூரியன் என்கிற கோஷம் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக நரசிபுரம் கார்த்திகேயன், அதிமுக வேட்பாளராக எஸ்.பி. வேலுமணி, தமிழக வெற்றி கழகம் சார்பில் சதீஷ்ராஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் ரஜபுநிஷா, மற்றும் சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.

அதிமுக வேட்பாளரும் மண்ணின் மைந்தருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொண்டாமுத்தூர் தொகுதியில் நன்கு அறிமுகம் இருப்பதால் தொகுதியைப் பொறுத்தவரை எஸ்.பி. வேலுமணி தான் வெற்றி வேட்பாளர் என்று தொகுதி மக்களால் கூறப்பட்டு வருகிறது. இந்தத் தேர்தல் வேளையை கடந்த ஒரு வருட காலமாக டோர் பை டோராக பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாகவும் தொகுதி மக்களின் தேவைக்கேற்ப பொருளாதார உதவியும் செய்து வருவதால் எஸ்.பி. வேலுமணியை வெற்றி வேட்பாளர் என்று தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேயன் என்பவர் நரசிபுரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இவரது சொந்தபந்த ஓட்டுகள் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. வேலுமணிக்கு கொஞ்சம் சரிவை தந்தாலும் வெற்றியை பாதிக்காது என்று தொண்டாமுத்தூர் தொகுதி முக்கிய பிரமுகர்கள் கூறுகிறார்கள். அத்துடன் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் சதீஷ்ராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரஜபுநிஷா இருவரும் கணிசமான ஓட்டுக்களை இளைய தலைமுறையினர் வழியாக பிரித்தாலும் எஸ்பி வேலுமணியன் வெற்றியை பாதிக்காது என்று உள்ளதை உள்ளபடி நம்மிடத்தில் கூறுகிறார் தொண்டாமுத்தூர் வாக்காளர் ஒருவர்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக செந்தில் பாலாஜியும், அதிமுக வேட்பாளராக அம்மன் அர்ஜுனனும், தமிழக வெற்றி கழகம் வேட்பாளராக செந்தில்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் பேரறிவாளன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சுமார் 27 பேர் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான அம்மன் அர்ஜுனன் ஏற்கனவே தெற்கு தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார். பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துடன் கோவை தெற்கு தொகுதி மக்களோடு மக்களாக கலந்து செயலாற்றியவர். அதே நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் ஆல் இன் ஆளாக தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதால் அம்மன் அர்ஜுனன் வெற்றி கனியை தட்டி பறிப்பதில் முன்னிலை வகிக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக திமுக வேட்பாளரான செந்தில் பாலாஜி அதிமுக வேட்பாளரிடம் தோற்றுப் போனால் தனது எதிர்காலம் பாதிக்குமே என்று கருதிய அவர் தனது கைத்தடி கரூர் வாசிகளை இறக்குமதி செய்து கோவை தெற்கு தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட வைத்தாராம். எதிரும் புதிரும் ஆக தேர்தல் களத்தில் இருக்கும் அம்மன் அர்ஜுனனும், செந்தில் பாலாஜியும் தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக செந்தில் பாலாஜிக்கு கோவை மாநகர மாவட்ட அனைத்து முக்கிய திமுக பிரமுகர்களும் தேர்தல் களத்தில் வேலை செய்து வருகின்றனர். அதே நேரத்தில் லோக்கல் பிரமுகர்களை விரும்பாமல், கரூர் வாசிகளை கொண்டு வந்து தேர்தல் களத்தில் இறக்கி ஆழம் பார்த்து வருகிறாராம் செந்தில் பாலாஜி என்று நம்மிடத்தில் தகவலை ரிலே செய்கிறார் திமுக இளைஞர் அணி பிரமுகர் ஒருவர்.
அத்துடன் கரூர் பாலிடிக்ஸ் கோவையில் எடுபடுமா.? என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார்கள். மேலும் கோவை மாநகராட்சி ஆணையர் பிரபாகரன் பதவிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன அவரது ஆதரவோடு செந்தில் பாலாஜி தேர்தல் களத்தில் தனது ஆடு புலி ஆட்டத்தை ஆரம்பித்து விட்டாராம். வாக்குப்பதிவு அன்று கோவை தெற்கு தொகுதியில் பெரிய கலவரம் நடைபெற வாய்ப்புள்ளதாக தெற்கு தொகுதியில் வசிக்கும் நடுநிலையாளர்கள் இத் தகவலை நம்மிடத்தில் கூறுகிறார்கள்.
சட்டமன்றத் தேர்தல் வாக்கு என்னும் பொழுது கோவை தெற்கு தொகுதி நிலவரம் கலவரம் ஆக சூழல் உருவாகிக் கொண்டு வருகிறதாம். அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் வெற்றி என்ற செய்தி வரும் பொழுது அதை தடுத்து நிறுத்தி விட முயற்சிகள் பல நடந்து கொண்டிருக்கிறது. காரணம் கோவை மாநகராட்சி ஆணையர் பிரபாகரன் ஆசியோடு திமுக வேட்பாளர் கரூர் செந்தில் பாலாஜிக்கு ரகசிய பாஷையில் பேசி அவருக்கு உதவி செய்து வருவது தான் காரணம் என்று அரசியல் முக்கிய புள்ளி விவரமாக நம்மிடத்தில் கூறுகிறார்கள்.
கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் ஜெயராம் தேர்தல் களத்தில் நிற்கிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீநிதி களம் காண்கிறார். தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கிரி பிரசாத், நாம் தமிழர் கட்சி சார்பில் நேருஜி மற்றும் சுயேச்சைகள் 24 பேர் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வேட்பாளர்களாக நிற்கிறார்கள்.

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அதிமுக வேட்பாளரான ஜெயராம் சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். ஒரு காலகட்டத்தில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி மில் தொழிலாளர்கள் வசிக்கும் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்து வந்தது. காலப்போக்கில் சிங்காநல்லூர் தொகுதி அதிமுகவின் கோட்டையாக மாறிவிட்டதாக அத்தொகுதி மக்கள் நம்மிடத்தில் கூறுகிறார்கள். சிட்டிங் எம்.எல்.ஏ.வான கே.ஆர். ஜெயராம் தனது தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நலத் திட்டங்களை கொண்டு வந்ததுடன் பொதுமக்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்துள்ளாராம். 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சிங்காநல்லூரில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். இவருக்கு அதிமுகவில் உள்ள பல்வேறு தலைவர்கள், பொறுப்பாளர்கள் இரவு, பகல் பாராமல் தேர்தல் வேலை செய்து கொண்டு வருகிறார்கள். இத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆன கே.ஆர். ஜெயராம் மினிஸ்டர் ஆகிவிடுவார் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் அதிமுக முக்கிய பிரமுகர்கள்.

அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஸ்ரீநிதி என்பவர் கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உடுமலைப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் சார்பில் போட்டியிட்டவர். தற்போது சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஸ்ரீநிதி நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தனது சமூக ஓட்டுகளை எதிர்பார்த்து களத்தில் நிற்கிறார். ஏற்கனவே சிங்காநல்லூர் தொகுதியில் நாயுடு சமூக மக்கள் பரந்து விரிந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய நிலவரப்படி பழைய ஆட்கள் ஊருக்குள் இல்லை. எல்லோரும் பெங்களூர் சென்னை மற்றும் பல வெளியூர்களுக்கு சென்று விட்டார்கள். தற்போது பலதரப்பட்ட சமூக மக்கள் பரந்து விரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் கவுண்டர் சமுதாயமாக இருந்தாலும் பலதரப்பட்ட சமூக மக்களிடத்தில் நன்மதிப்பை பெற்றுள்ளார். ஆகையால் சிங்காநல்லூர் சட்டமன்றத்தில் மறுபடியும் இரட்டை இலை வெற்றி தந்த இலையாக மாறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள். தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் கிரி பிரசாத், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நேருஜி ஆகிய இருவரும் கணிசமான ஓட்டுக்களை பிரித்தாலும் அதிமுக வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் வெற்றி உறுதி என்றே சொல்லலாம்.!
கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தாமோதரன், திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விக்னேஷ், நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் வேட்பாளர் பானுப்பிரியா இவர்களுடன் ஒரு சுயேட்சை வேட்பாளர் களத்தில் நிற்கிறார்கள். திமுக வேட்பாளர் சபரி கார்த்திகேயன் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட்டாலும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் நேரடி பார்வை இத்தொகுதிக்கு உண்டு. காரணம் மதுக்கரை மற்றும் பல்வேறு ஊர்கள் கோவை மாநகரத்தை ஒட்டி இருப்பதால் எப்போதுமே இத்தொகுதி அதிமுகவுக்கு கை கொடுக்கும் தொகுதியாக கருதப்படுவதால் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தாமோதரன் வெற்றி வேட்பாளராக பொதுமக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் விக்னேஷ் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பானுப்பிரியா ஆகிய இருவரும் ஒரு கணிசமான ஓட்டு வங்கியை பிரித்தாலும், தற்போதைய நிலவரப்படி அதிமுக வேட்பாளரான தாமோதரனுக்கே களம் சாதகமாக இருக்கிறது.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளராக நித்தியானந்தன், அதிமுக வேட்பாளராக பொள்ளாச்சி ஜெயராமன், தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பொள்ளாச்சி நகரத்தை பொறுத்த வரை திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் செயல்பட்டு வந்தார். அவரது செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்று முன்னாள் மாவட்ட செயலாளர் பொறுப்பு தென்றல் செல்வராஜ் என்பவர் ஒருதலை பட்சமாக அன்றாட வசூலை நினைத்து நகரக் கழகச் செயலாளர் நவநீதகிருஷ்ணனுக்கு எதிராக பல்வேறு மோடி மஸ்தான் வேலைகளை செய்து வருவதுடன் தனது அரசியல் பிழைப்புக்காக அன்றாடம் குறுக்குச்சால் ஓட்டிக்கொண்டு வந்தாராம் தென்றல் செல்வராஜ்.
அதே நேரத்தில் பொள்ளாச்சி திமுக நகர கழக செயலாளர் நவநீதகிருஷ்ணன் முடிந்த அளவுக்கு வளைந்து, நெளிந்து கொடுத்து பார்த்தார் நாளுக்கு நாள் மொட்ட பெட்டிஷன் தலைமைக்கு போடுவது போன்ற பல்வேறு குட்டி கலாட்டாக்களை செய்து வந்த மாவட்ட கழக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் நகரக் கழக செயலாளர் நவநீதகிருஷ்ணனுக்கு எதிராக கோஷ்டி பூசலை உருவாக்கினார். பொள்ளாச்சி நகர கழகத்தை இரண்டாகப் பிரித்து நவநீதகிருஷ்ணனுக்கு எதிராக வேறு ஒருவரை கொண்டு வந்து பொள்ளாச்சி நகரத்தில் இரண்டு நகர கழக செயலாளர் பணியாற்றும்படி அரசியல் நிகழ்த்தினார். ஆனால் அப்போதும் நவநீத கிருஷ்ணன் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அமைதி காத்து வந்தார். தெற்கு மாவட்ட திமுக செயலாளரான தளபதி முருகேசனை தன் கைக்குள் வைத்துக்கொண்டு பல நெருக்கடிகளை நகரச் செயலாளர் நவநீத கிருஷ்ணனுக்கு கொடுத்துக் கொண்டே வந்தார் தென்றல் செல்வராஜ், ஆனால் ஒரு வேலையும் புடுங்க முடியாமல் இருந்த பொழுது சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வந்தது. தனது மனைவிக்கு பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்கு பணம் கட்டினார் நவநீதகிருஷ்ணன் ஆனால் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டன. தற்போது கூட்டணி கட்சிக்கு தனது கட்சிக்காரர் உடன் தேர்தல் வேலை செய்து கொண்டு வருகிறார் நவநீதகிருஷ்ணன்.
ஆனால் தென்றல் செல்வராஜ் என்பவரோ கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு தேர்தல் வேலை செய்கிறேன் என்று மங்கி வேலை செய்து கொண்டிருக்கிறாராம். திமுகவின் உள்ளடி வேலைகளை நன்கு புரிந்து கொண்ட அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் சத்தம் இல்லாமல் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று தேர்தல் பணியில் மூழ்கி விட்டாராம். தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் ராமநாதன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் செந்தில் குமார் ஆகியோர் தங்களுக்கு வர வேண்டிய ஓட்டுகளை பிரித்து சென்றாலும் அதிமுக வேட்பாளரான பொள்ளாச்சி ஜெயராமன் குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று தொகுதி நிலவரம் கூறுகிறது.
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டவர் சுதாகர், அதிமுக சார்பில் வேட்பாளராக லட்சுமண சிங், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஸ்ரீதரன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் உமாதேவி ஆகியோர் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்றனர். வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் சுமார் 50,000 பேர் வசிக்கின்றனர். ஆனைமலை ஒன்றியத்தில் ஒன்றரை லட்சம் பேர் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் திமுக வேட்பாளர் சுதாகர் பல கோல்மால் வேலைகளை செய்வதில் படு கில்லாடியாம். வால்பாறை நகராட்சியில் இருந்து தனக்கு மாதாந்திர ஊதிய வேண்டும் என்று ஆணையாளருடன் மறைமுக டீல் பேசி வாங்கி விடுவதில் அவருக்கு நிகர் அவரே தான் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள் வால்பாறை நகராட்சியில் ஒப்பந்ததாரர் ( காண்ட்ராக்ட் ) வேலை செய்து வரும் நமக்கு தெரிந்த ஒருவர். வால்பாறை சட்டமன்ற தொகுதி எப்படியாவது எனக்கு வாங்கி கொடுங்கள் என்று கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசனிடம் நடையாய் நடந்து கொடுக்க வேண்டியதை கொடுத்து சத்தம் இல்லாமல் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு தனக்கு சீட்டு வாங்கிக் கொண்டு வந்து விட்டாராம் என்ற டாக் வால்பாறை மலை மாவட்டத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சுதாகர் செய்யும் பல அக்கிரமம் அநியாயமும் தேர்தலில் அவருக்கு ஒரு பாடத்தை கொடுக்கும் என்று சாபம் விடுகிறார்கள் வால்பாறை திமுகவினர்.

வால்பாறை சட்டமன்ற தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவான கஸ்தூரி வாசு சீட்டு கேட்ட போது அதிமுக தலைமை இவருக்கு வாய்ப்பு வழங்காமல் லட்சுமண சிங் என்பவருக்கு வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு சீட்டு ஒதுக்கியது தான் ஆச்சரியம் என்று கூறுகிறார்கள். அதிமுக தலைமை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 20 சி பேரம் பேசப்பட்டு வசூல் செய்யப்பட்டதாம் அந்த வகையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு இவ்வளவு பணம் லட்சுமணன் சிங் கொடுத்திருப்பாரா.? என்ற கேள்வியை பட்டிமன்றம் போட்டு விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் வால்பாறை அதிமுகவினர் சிலர்.
திமுகவில் கோழிக்கடை கணேசன் மற்றும் பலர் சுதாகருக்கு ஆதரவான நிலைப்பாடு இல்லை என்றாலும் சுதாகரை வெற்றி பெறச் செய்ய முற்படுவார்களா என்ற கோணத்திலும் பொதுமக்கள் சிந்திக்க துவங்கி விட்டார்களாம். 25 ஆண்டுகளுக்கு பின்பு மறுபடியும் திராவிட முன்னேற்ற கழகம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் நேரடியாக களத்தில் நிற்பதை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. 25 ஆண்டுகளுக்குப் பின்பு மறுபடியும் திமுக நேரடியாக வால்பாறை சட்டமன்ற தொகுதியில் களத்தில் நிற்பதை பார்த்தால் வெற்றியா அல்லது தோல்வியா என்பதை பொதுமக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று நம்மிடத்தில் கூறுகிறார்கள்.
_நமது நிருபர்




































































































