திண்டுக்கல் மாவட்டத்தின் வனவிலங்குகளின் புகலிடமாக இருந்த அடர்ந்த வனப்பகுதிகள், இப்போது கள்ளத் துப்பாக்கிகளின் வேட்டைக்காடாக மாறி வருகின்றன. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் மற்றும் சிறுமலை வனப்பகுதிகளில் கள்ளத் துப்பாக்கிகளின் நடமாட்டம் முன்னெப்போதையும் விட எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை என வனத்துறையினர் கைகளைக் பிசைந்து கொண்டு திணறி வரும் அவலநிலை தான் அரங்கேறி வருகிறது. வனத்துறையின் இந்த ‘இயலாமை’ ஒருபுறமிருக்க, கள்ளத் துப்பாக்கிகளின் உற்பத்திக் கூடாரமாகத் திகழும் திண்டுக்கல் மாவட்டத்தில், காவல்துறை எவ்வித விழிப்புணர்வும் இன்றி தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதுதான் வேதனையின் உச்சம் !
திண்டுக்கல் மாவட்டம், இயற்கை சூழல் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் முக்கிய வனப்பரப்பைக் கொண்டது. கீழ்மலை, மேல்மலை, தாண்டிக்குடி, கன்னிவாடி, ஆடலூர், பன்றிமலை மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளை மட்டுமே கணக்கிட்டால், சுமார் 1,200 க்கும் அதிகமான சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு பரந்து விரிந்து கிடக்கிறது.
இங்கு யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, மிளா, மான் எனப் பல உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால், இந்த வனவிலங்குகளுக்கு இப்போது மனிதர்களின் வேட்டை வெறிதான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.
இது சம்பந்தமாக வன ஆர்வலர்கள் கூறும்போது.. காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாட சட்டவிரோத கும்பல் ஒன்று அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களில் நாட்டு வெடிகளை கலந்து வைத்து விலங்குகளைக் கொடூரமாகக் கொல்கிறார்கள். மான் வேட்டைக்கு என பிரத்யேகமாக கள்ளத் துப்பாக்கிகள் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் வனத்துறையினர் நடத்திய சோதனையில், ஒட்டன்சத்திரம் உடைப்பட்டி வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய மணிகண்டன், சோலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தவசிமடையில் கேளையாடு (மான் வகை) வேட்டையாடிய பெருமாள், ஆண்டிச்சாமி, கார்த்தி ஆகிய மூவர் சிக்கினர். செந்துறையில் கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஆண்டிச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இப்படி ஆங்காங்கே சில கைது நடவடிக்கைகள் நடந்தாலும், அடிமட்டக் கூலிகள் மட்டுமே சிக்குகிறார்களே தவிர, இதன் பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகளையோ, துப்பாக்கி நெட்வொர்க்கையோ வனத்துறையினரால் நெருங்கக்கூட முடியவில்லை. நாங்கள் பிடித்துக் கொண்டேதான் இருக்கிறோம், ஆனால் துப்பாக்கி கலாச்சாரம் குறைந்தபாடில்லை என்று வனத்துறை அதிகாரிகள் புலம்புவது, அவர்களின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.
இந்த நாட்டுத் துப்பாக்கிகளின் உற்பத்திப் புள்ளி குறித்து ரகசிய விசாரணையில் இறங்கியபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. திண்டுக்கல் அருகே உள்ள வெள்ளோடு பகுதிதான் இந்த கள்ளத் துப்பாக்கிகளின் பிரதான உற்பத்தி கேந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகளைப் பெரிய விவசாயிகளும், வசதி படைத்த வேட்டைப் பிரியர்களுமே அதிகம் வாங்குகின்றனர்.
தோட்டா பயன்படுத்தும் வகை ரூபாய் 20,000 முதல் 50,000 வரை நவீனத் தோட்டாக்களைப் பயன்படுத்தி துல்லியமாகச் சுடக்கூடியது.
பால்ரஸ் குண்டு வகை ரூபாய் 10,000 ஆயிரத்திற்கே கிடைக்கிறது. இந்தத் துப்பாக்கிகளை குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதில்லை, வேட்டைக்கு மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள் என்று அதிகாரிகள் தரப்பிலேயே ஒரு மெத்தனப் போக்கு நிலவுகிறது.
நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பதில் வெள்ளோடு பகுதியில் இரண்டு பேர்தான் ‘கிங்மேக்கர்கள்’. அவர்கள் மீது ஏற்கனவே தலா 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளியே வருவதும், மீண்டும் துப்பாக்கி தயாரிப்பதுமாகவே அவர்களின் ‘தொழில்’ தடையின்றி நடக்கிறது. இவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்காமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஏன் ? கடந்த சில வருடங்களுக்கு முன்பு, துப்பாக்கிகளை ஒப்படைத்தால் வழக்கு கிடையாது என வனத்துறையும் காவல்துறையும் இணைந்து ஓர் அறிவிப்பை வெளியிட்டன. பயந்துபோன வேட்டைக்காரர்கள், ஒரே நாளில் சிறுமலை, தவசி, உடைப்பட்டி பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளைப் புதர்களில் வீசிவிட்டுச் சென்றனர். ஆனால், அதன் பிறகு எந்தவொரு தொடர் நடவடிக்கையும் இல்லை. தூங்குவது காவல்துறையா ? வனத்துறையா ?
தோட்டப் பகுதிகள் மற்றும் விளைநிலக் காவல்காரர்கள் என்ற போர்வையில், கள்ளத் துப்பாக்கிகளைத் தாராளமாகப் பதுக்கி வைத்துள்ளனர். விவசாய நிலங்களில் பதுக்கி வைப்பதால் எங்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை என்கின்றனர் வன அதிகாரிகள். காடுகளைக் காக்க வேண்டிய வனத்துறை, போதிய ரோந்துப் பணிகளை மேற்கொள்ளாமல் ஏசி அறைகளில் முடங்கிக் கிடக்கிறது. அதைவிடக் கொடுமை, தங்கள் எல்லைக்குள் கள்ளத் துப்பாக்கித் தொழிற்சாலையே இயங்கி வந்தாலும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதான்.
மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை, தன் உளவுத்துறைப் பிரிவை முடுக்கிவிட்டு, வெள்ளோடு கள்ளத் துப்பாக்கி நெட்வொர்க்கை மொத்தமாக வேரறுத்தாலே ஒழிய, சிறுமலையின் வனவிலங்குகளைக் காப்பாற்ற முடியாது என்கின்றனர்.


































































































