புகழ்பெற்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியான உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவில் வெற்றி பெற்றதிலிருந்து, தென்னிந்திய திரைப்பட உலகின் மிகவும் விரும்பப்படும் நடன அமைப்பாளர்களில் ஒருவராக உயர்ந்தவர் ஷெரீஃப். அவரது இந்த ஊக்கமூட்டும் பயணம், ஆர்வம், விடாமுயற்சி மற்றும் இடையறாத கடின உழைப்பின் பலனாக உருவானது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் அசாமி திரைப்படங்களில் பல பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ள ஷெரீஃப், தற்போது தனது 250வது பாடலை நடன அமைப்பாளராக நிறைவு செய்து ஒரு சிறப்பான மைல்கல்லை எட்டியுள்ளார்.
சூது கவ்வும் திரைப்படத்தின் “காசு பணம்” போன்ற நினைவில் நிற்கும் ஹிட் பாடல்களிலிருந்து, பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் நடனமாட வைத்தது வரை, மேலும் ரெட்ரோ திரைப்படத்தில் சூர்யாவின் “கனிமா” பாடலுக்கு புதுமையான நடன விருந்தை படைத்ததுவரை, ஷெரீஃபின் நடன அமைப்புகள் எப்போதும் ஆற்றல், புதுமை மற்றும் தனித்துவமான பாணியால் ரசிகர்களையும் திரைப்படத் துறையினரையும் கவர்ந்துள்ளன.

இந்தச் சிறப்பு மிக்க தருணம் குறித்து தனது நன்றியை வெளிப்படுத்தி ஷெரீஃப் பேசுகையில், எனது 250 வது பாடலை எட்டியிருப்பது கனவு போலவும், மிகுந்த உணர்ச்சிகரமான அனுபவமாகவும் உள்ளது. இந்த மைல்கல் எனக்கு மட்டுமல்ல; என்னை நம்பி, இந்தப் பயணத்தில் என்னுடன் நின்ற அனைவருக்கும் சொந்தமானது. என் வழிகாட்டிகள், பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள், உதவி நடன அமைப்பாளர்கள், நடனக் கலைஞர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் என் பணியை நம்பி ஊக்கமளித்த திரைத்துறையின் ஒவ்வொரு சகோதரருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பாடலும் எனக்கு ஒரு புதிய கற்றல் அனுபவமாக இருந்துள்ளது. பல ஆண்டுகளாக என்மீது பொழிந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று கூறினார்.

மேலும் நடிப்பும் இயக்கமும் நான் மிகவும் மதிக்கும் துறைகள். சரியான நம்பிக்கையுடனும் பொருத்தமான வாய்ப்புடனும் ஏதாவது வந்தால், அதை ஆராய நான் விரும்புகிறேன். ஆனால், நடன அமைப்பாளராக இருப்பதே எனக்கு இந்தத் துறையில் மதிப்புமிக்க இடத்தை அளித்துள்ளது. இப்போது அதிலேயே கவனம் செலுத்தி, என்னைவிட திறமையான பல இளம் கலைஞர்களை உருவாக்கவும் வளர்க்கவும் விரும்புகிறேன். சினிமாதான் என் ஆன்மா. எனது திறமையையும், என் தொழிலையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள நான் பாடுபடுவேன் என்றார்.
Sherif’s Dance Companyயை நிறுவியதோடு மட்டுமல்லாமல், பல இளம் திறமையாளர்களை வழிநடத்தி வருகிறார் ஷெரீஃப். மேலும், Global Dance Council (GDC) ஒருங்கிணைப்பாளராக இணைந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சினிமாவில் தனது படைப்பாற்றலின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டே, அடுத்த தலைமுறை நடனக் கலைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கமாக இருந்து வருகிறார்.



































































































