
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், பள்ளி, கல்லூரி வளாகங்களில் போதை பொருள் விற்பனை நடைபெறுவதை சுட்டிக்காட்டி ஏற்கனவே செய்திகள் வெளியாகியும், பழனி காவல்துறையினர் இதுவரை லாட்டரி விற்பனையை தடுக்கவில்லை. இருசக்கர வாகனத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தினர் பணத்தைப் பெற்றுக்கொண்டு, லாட்டரி விற்பனை செய்ய அனுமதிக்கின்றனர். இதனை உயர் அதிகாரிகளுக்கு தெரியாத வண்ணம் மறைத்து விடுகின்றனர் என்கிற குற்றச்சாட்டும் அப்பகுதியினர் மத்தியில் உள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பழனி போலீசாருக்கு ரகசியமாக தகவல் கிடைத்ததாகவும். தகவலையடுத்து பழனி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில், நகர காவல் சார்பு ஆய்வாளர் விஜயுடன் போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி அருகே சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த அப்பர் தெருவை சேர்ந்த நாகேந்திர பிரசாத், புது நகர் மருது, தட்டாங்குளம் பீட்டர் ஜீவன், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ஆகியோரை அழைத்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், சம்பந்தப்பட்டோரை சோதனை செய்ததில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனைக்கு செய்வதற்காக வைத்திருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளார்களாம்.
மேலும், கஞ்சா விற்பனை செய்தவர்களிடம் உள்ள இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து, நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை, போதைப்பொருள் விற்பனை பழனி நகரில் விற்பனை செய்வது நகர் காவல்நிலைய காவலர்கள் ஒரு சிலர் துணையோடு தான் நடைபெறுகிறது. உயர் அதிகாரிகள் நெருக்கடியை சமாளிப்பதற்காகவே, அவ்வப்போது இது போன்று வழக்கு பதிவு செய்து சாதிக்தது போல் காட்டிக் கொள்கிறார்கள் என்கிறார்கள்.