
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாய ஆலை நிர்வாகத்தின் அலட்சியத்தால் விஷ வாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்லடத்தை அடுத்த கரைப்புதூரில் ஏராளமான சாய சலவை ஆலைகள் இயங்கி வருகிறது. அதிக அளவில் சுற்றுப்புற சூழலை பாதிக்கும் தொழிலாக செயல்படும் இத்தொழில்சாலைகளில் இருந்து வெளியேறும் சாயகழிவினால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு கால்நடை, விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஜீரோ டிஸ்சார்ஜ் முறையில் சுத்தகரிக்கப்பட்டு நீர் மறு சுழற்சி முறையில் உபயோகிக்கப்படுகிறது. இவ்வாறு சுத்தகரிக்க ஆலையில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டு கழிவு நீர் சேமிக்கப்படுகிறது. இந்நிலையில் கரைப்புதூரில் இயங்கிவரும் பிரபல ஆலயா சாய சலவை ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி ஐந்து தொழிலாளர்கள் சுத்தம் செய்துள்ளனர். அப்போது விஷவாயு தாக்கியதில் ஐந்து பேரும் மூச்சுதிணறி மயக்கம் அடைந்துள்ளனர். தொட்டியில் இறங்கியவர்கள் வெகுநேரமாகியும் மேலே வராததை அறிந்து அங்கிருந்தவர்கள் பார்த்தபோது விஷவாயு தாக்கியது தெரியவந்துள்ளது.

அதன்பிறகு ஐந்து பேரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதில் வெங்கமேட்டை சேர்ந்த சரவணன் மற்றும் வேணுகோபால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிருக்கு ஆபத்தான மூவரை தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்களின் அழுகுரல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் மதியம் சுமார் மூன்று மணியளவில் நடைபெற்ற இந்த கொடூரச்சம்பவம் வெகுநேரம் கழித்து வெளியே தகவல் கசிய ஆரம்பித்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்த்துதாஸ் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நிர்வாகத்தை சேர்ந்தவர்களிடம் சுத்தம் செய்யும்போது மேற்பார்வையாளர் இல்லாதது ஏன் என கேட்ட கேள்விக்கு மழுப்பலான பதில் தான் வந்துள்ளது.

மேலும் இதே போல் கடந்த சில தினங்களுக்கு முன் மற்றொரு சாய ஆலையில் தீவிபத்து ஏற்பட்டு சிலிண்டர் வெடித்த சம்பவம் நடைபெற்றது. அதிக அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் இத்தொழிலில் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் மட்டும் போதாது, தொழிலாளர்களுக்கு உயிர்கவசம் கட்டாயப்படுத்தவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.