
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் முதன்முறையாக பரமக்குடி வருவாய் கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. பரமக்குடி சார் ஆட்சியர் அபிலாஷா கபூர் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பரமக்குடி வருவாய் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளான பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர்.

அப்போது பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பகுதிகளில் காட்டு பன்றிகளால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றை சேதப்படுத்துகிறது. இதனால் அதிகளவில் சேதம் ஏற்படுகிறது. காட்டு பன்றிகளை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரும்பாலான விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். விளை நிலங்களில் உலாவரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு கிராமங்களிலும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்களில் அதிகளவில் கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுகிறது, உடனடியாக கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார். பரமக்குடி வருவாய் கோட்டளவில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை, வனத்துறை, வருவாய்த்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்தனர்.