
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, கமுதக்குடி கிராமத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூற்பாலை மூடப்பட்டது. இதனால் இங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர். இந்த ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கு கூட பணம் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்ட நூற்பாலையை திறக்க வேண்டும், ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊழியர்கள் நூற்பாலை வாயில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆறு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நூற்பாலையை திறக்க்கோரி 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய மாநில அரசுகள் செவிசாய்த்து, மூடப்பட்ட நூற்பாலையை திறக்க வேண்டும் என அப்பகுதியினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.