
ஆசிரியர்களுக்கு ஓய்வு பெற்றபின் வழங்கப்படும் பணி நீட்டிப்பை, மே 31 வரை நீட்டித்து வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பள்ளிக் கல்வித்துறையின் கீழ் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் போது, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெற்றால், மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்படும் என்பதற்காக, ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு இறுதி நாள் வரை (மே-31) பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணை 115-ல், இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெற்றால், அவர்கள் கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலை நாள் வரைதான் பணி நீட்டிப்பு பெற முடியும் என்று அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பு இருந்ததால் அரசாணை செயல்படுத்தப்படாமல் பழைய நிலையே தொடர்ந்து இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 13.06.25 ல் பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செயல்முறையில், கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு, கல்வி ஆண்டின் பள்ளி இறுதி வேலைநாள் வரைதான் பணி நீட்டிப்பு வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாணை 115 மற்றும் இயக்குநரின் செயல்முறைகள் பல ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற இருக்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. அரசின் கூற்றுப்படி பார்த்தால், ஆசிரியர்கள் மே மாதம் பணியே செய்வதில்லை என்ற கருத்தை வைத்து, அதனடிப்படையில்தான் அரசாணையும், அதனை தொடர்ந்து செயல்முறையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும், ஆசிரியர்கள் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்தல் மற்றும் தேர்ச்சி அறிக்கை தயாரித்து வெளியிடுதல் போன்ற கல்வி செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பிரச்சாரங்கள் மற்றும் வகுப்பறைகள், பள்ளி வளாகத்தை தயார் செய்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர்.
எனவே, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு அந்த கல்வியாண்டியின் இறுதி நாளான மே-31 வரை பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.