
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், ராணி அஹில்யா பாய் 300-வது பிறந்தநாள் இன்று மாலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பில் கொண்டாடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள பா.ஜ.க தேசிய அமைப்பு இணைச்செயலாளர் சிவப்பிரகாஷ், தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று காலை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க அலுவலகம் வந்தடைந்தனர். அவர்கள் இருவருக்கும் மாவட்ட பொதுச்செயலாளர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சண்முகநாதன் தலைமையில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பின்னர் அச்சுந்தன்வயல் பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன் கூறியதாவது.. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை திட்டமிட்டே நடத்த விடாமல் தி.மு.க அரசு தடுக்கிறது. இம்மாநாடு நடைபெற்று விட்டால் எங்கே பெரும் எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு விடுமோ என்கிற அச்சத்தில் தி.மு.க உள்ளது. யாருக்கும் தொந்தரவு இல்லாத முருக பக்தர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் பொதுவான இடத்தில் நடைபெற உள்ள இந்த மாநாடு எங்கே வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்டால் தமிழகத்தில் பா.ஜ.க அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்து விடும் என்கிற பயமும் தி.மு.க-விற்கு வந்துவிட்டது.

அ.தி.மு.க-பா.ஜ.க எப்போது கூட்டணி அமைத்ததோ அன்றிலிருந்தே தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கு தோல்வி பயம் வந்துள்ளது. கூட்டணி தொடர்பான விமர்சனம் நாளொரு வண்ணம், பொழுதொரு மேனியுமாக அரங்கேறி வருகிறது. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடைபெறும். எதிர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்காளர்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என கூறினார்.

முன்னதாக பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர்கள் பொன். பாலகணபதி, கருப்பு முருகானந்தம், முன்னாள் கயறு வாரிய தலைவர் குப்புராமு, ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் கி.முரளிதரன், மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் ஜி.குமார், மாவட்ட துணைத்தலைவர்கள் முத்துச்சாமி, சௌந்தரராஜன், மாவட்ட செயலாளர்கள் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன், சிவசங்கர், மாவட்ட ஊடகப் பிரிவு தலைவர் எஸ்.பி.குமரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு அழைப்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.