
தமிழ்நாடு பாஜக தலைவராக கடந்த நான்கு வருடங்களாக அண்ணாமலை பதவி வகித்து வந்தார். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அதில், பாஜக எம்.எல்.ஏவும், தமிழ்நாடு சட்டமன்ற பாஜக குழு தலைவராகவும் இருந்துவரும் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். மாநிலத் தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததன் காரணமாக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாஜக மாநில நிர்வாகிகளுடனான ஆலோசனைக்காகவும், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தைக்காகவும் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் வேட்புமனு தாக்கல் நேரம் நிறைவடைந்தைத் தொடர்ந்தும், வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததைத் தொடர்ந்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பின்னர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடம் மட்டுமே வேட்பு மனு பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளை செய்துள்ளார். பிரதமர் மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு முக்கியமானது. கட்சியின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலையின் திறன்களை பாஜக பயன்படுத்தும் என தெரிவித்துள்ளார்.