“நிர்வாகம் பொருப்பல்ல” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு !

Spread the love

அறிமுக நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா மற்றும் இயக்குநரும், நடிகருமான கௌரவ் நாராயணன் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

எஸ். கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படத்தில் எஸ் கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம் ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெய ஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். என். எஸ். ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர் கே ட்ரிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார். மேலும் கே எம் பி புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் பி எம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம் புவனேஸ்வரன் மற்றும் சி சாஜு – ஜோதிலட்சுமி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர். இந்த திரைப்படத்தை சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘சினிமாவிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்தது. சினிமா குடும்பத்திற்கு என்னை அழைத்து வந்த ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படக்குழுவினருக்கு நன்றி. இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி என்றார் .

பாடலாசிரியர் கருணாகரன் பேசுகையில், இந்தப் படத்தில் இடம்பெறும் அனைத்துப் பாடல்களையும் எழுதுவதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும் , இசையமைப்பாளருக்கும் என் மனமார்ந்த நன்றி.‌ 2004ம் ஆண்டில் வெளியான ‘ஏய்’ படத்தில் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உடன் இணைந்து பணியாற்றிய வேண்டிய தருணம். ஆனால் அந்த வாய்ப்பு தவறிப் போனது. அதன் பிறகு அவருடைய இசையில் இப்போது அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

நடிகை மஞ்சு பேசுகையில், எல்லோரும் ஏதோ ஒரு சூழலில் மோசடிக்கு ஆளாகி இருப்போம். இதுபோன்ற உண்மை சம்பவத்தை தழுவி தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. அதனால் இந்தப் படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவை தர வேண்டும் என்றார்.

நடிகர் பிளாக் பாண்டி பேசுகையில், நானும் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். நானும், எனது மனைவியும் என்னுடைய இரண்டாவது மகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தோம். அந்தத் தருணத்தில் மருத்துவமனைக்கு கட்டணம் செலுத்துவதற்காக என்னுடைய வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வைத்திருந்தேன். நானும் என் மனைவியும் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி அவருடைய செல்போனுக்கு வந்த ஒரு லிங்கை தவறுதலாக தொட்டுவிட, என்னுடைய வங்கி கணக்கில் இருந்த அனைத்து பணமும் திருடப்பட்டிருந்தது.‌ எனக்கு அந்த நெருக்கடியான சூழலில் இந்த மோசடி நடைபெற்ற போது அதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதை பகிர்ந்து கொள்வதில் தயக்கம் இருக்கிறது. இருந்தாலும் நானும் மோசடியால் பாதிக்கப்பட்டேன் என்பதற்காக இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய மக்கள் பணத்தை மோசடி பேர்வழிகளிடம் இழந்து இருப்பார்கள். தற்போது ஒவ்வொருவரும் வாட்ஸ்அப்பை பயன்படுத்துகிறார்கள். அதில் ஏடிகே ஃபைல்ஸ் என்று ஒரு லிங்க் வருகிறது. நீங்கள் எந்த சூழலில் இருந்தாலும் முழுமையான விழிப்புணர்வுடன் இதனை எதிர்கொள்ளுங்கள்.‌ நீங்கள் உங்களுடைய சொந்த புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளும் போதும் கவனத்துடன் இருங்கள். இந்தப் படமும் இதைத்தான் சொல்கிறது. நான் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இயக்குநர் கார்த்திக் மற்றும் படக் குழுவினருடன் தொடர்ந்து பழகி வருகிறேன். அற்புதமான குழு. கடுமையாக உழைத்து படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

தணிக்கை குழு உறுப்பினர் சௌதாமணி பேசுகையில், நான் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்கும் வாசிப்பாளர். தற்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றுகிறேன். வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு  திரைப்படங்களை தணிக்கை சான்றிதழுக்காக பார்ப்போம். இந்த சமுதாயத்தில் புரையோடி இருக்கின்ற, அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு விஷயத்தை படக் குழுவினர் கையாண்டிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை பாராட்டுகிறேன்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியாவில் 17,000 கோடி ரூபாய் அளவிற்கு சைபர் குற்றங்கள் நடைபெற்று இருக்கின்றன. இது தொடர்பாக தினந்தோறும் செய்திகள் நாளிதழ்களில் வெளியாகிறது. ஆன்லைன் மோசடி, டிஜிட்டல் அரெஸ்ட், டிரேடிங் ஸ்கேம், முதலீடு தொடர்பான மோசடி என நாள்தோறும் விதவிதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். நம் நாட்டின் பட்ஜெட்டிற்கு நிகராக மக்கள் தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள். சைபர் மோசடியால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தங்களது வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை சமூகத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கி இருக்கிறார்கள்.

தணிக்கை குழுவை பொருத்தவரை கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது, யாரையும் அவமதிக்கக்கூடாது, அரசியல் தலைவர்களை பற்றி தவறாக பேசுவதோ சித்தரிப்பதோ கூடாது. எங்களைப் பொருத்தவரை படைப்பாளிகள் கொடுக்கும் ஒரு படம் சமூகத்தில் மக்களுக்கு படிப்பினையையும், விழிப்புணர்வையும், நல்லதொரு சிந்தனையையும் கொடுக்க வேண்டும் என்பதற்கு நாங்கள் முன்னுரிமை வழங்குவோம். அப்படிப்பட்டதொரு படத்தை எடுத்ததற்காக இந்த படக் குழுவினரை மீண்டும் பாராட்டுகிறேன் என்றார் .

நடிகர் இமான் அண்ணாச்சி பேசுகையில், புதுமுக நடிகர் மற்றும் இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற திரைப்பட விழாக்களில் அணிவிக்கப்படும் சால்வையால் எந்த பயனும் இல்லை. இதை யாருக்கும் அன்பளிப்பாக கொடுக்கவும் முடியவில்லை. அதனால் சால்வைக்கு பதிலாக துண்டினை (டர்க்கி டவல் –  குற்றால துண்டு ) பரிசாக அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன் என்றார்.

நடிகை மிருதுளா சுரேஷ் பேசுகையில், இந்த திரைப்படம் சமூகத்திற்கு தேவையான அழுத்தமான செய்தியையும், பொழுதுபோக்கையும் கொண்ட திரைப்படம். அனைவரும் நிச்சயமாக திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசுகையில், என் தந்தை தேவாவின் எழுபத்தைந்தாவது பிறந்த நாளான இன்று அவர் பாடிய ஒரு பாடலை இங்கு திரையிட்டு, அவரை கௌரவப்படுத்தியதற்காக அனைவருக்கும் என் தந்தையின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் வேறு துறையை சார்ந்தவராக இருந்தாலும் பொருத்தமான கதையை தேர்வு செய்து அதற்கு தேவையான பொருட்செலவில் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் அவருக்கு நிச்சயமாக நஷ்டத்தை தராது. லாபத்தை அள்ளித் தரும். அதற்கு என் வாழ்த்துகள்.

நானும், பாடலாசிரியர் கருணாகரனும் ஏற்கனவே இணைந்து பணியாற்றி இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படத்தில் தான் இணைந்திருக்கிறோம். அவரை பார்க்கும் போதெல்லாம் இவரைப் போல் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்படும். அவரிடமிருந்து இதை கற்றுக் கொண்டேன் என்றார்.

இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், இந்த ஆண்டு தேசிய விருதுக்கான நடுவர் குழுவில் தென்னிந்திய பிரதிநிதியாக தமிழ்நாடு சார்பில் நான் இடம் பெற்றிருந்தேன். இந்த நடுவர் குழுவில் நான் தான் மிகவும் இளையவன். சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கும் பட்டியலில் ‘பார்க்கிங்’ படத்துடன் வேறு சில படங்களும் போட்டியில் இருந்தன. இந்தத் தருணத்தில் கே. பாக்யராஜ் படங்களில் இடம் பிடித்திருக்கும் திரைக்கதை நுட்பங்களால் உந்தப்பட்ட நான் அவருடைய திரைக்கதை மேஜிக்கை உதாரணமாக பேசி தான் ‘பார்க்கிங்’ படம் தேசிய விருதுக்கு தேர்வானது. எனவே ‘பார்க்கிங்’ படம் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதன் பின்னணியில் கே. பாக்யராஜ் இருக்கிறார். திரைக்கதை என்றால் தமிழ் சினிமா தான் நிகரற்றது. இத்தனை ஆண்டு காலம் தமிழ் சினிமாவிற்கு சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருது வழங்கப்படவில்லை போன்ற சில விஷயங்களை பேசி பரிந்துரைத்தேன்.

அப்பா அம்மாவை நேசிப்பவர்கள் யாரும் தோற்க மாட்டார்கள். இப்படத்தின் தயாரிப்பாளரும் அவருடைய தந்தை மீது அளவற்ற நேசம் கொண்டவர். இதற்காகவே இந்த படம் வெற்றி பெறுவதற்கு அவருடைய தந்தையின் பரிபூரண ஆசி உண்டு என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்மறை எங்கும் இருக்கக் கூடாது என விரும்பும் நான் என் படத்தின் டைட்டிலில் கூட ‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’, ‘இப்படை வெல்லும்’ என பெயர் வைத்திருப்பேன். ஆனால் இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் பாசிட்டிவிட்டி இருக்கும். அவர் இந்த படத்தில் பங்களிப்பு வழங்கியது இப்படத்திற்காக வெற்றியை குறிக்கிறது.

மோசடி குறித்து படம் இயக்குவது கடினம். ஏடிஎம் பண மோசடி குறித்து நான் முதன்முதலாக ‘சிகரம் தொடு’ படத்தை உருவாக்கினேன். ஒரே ஒரு விசிட்டிங் கார்டை வைத்துக்கொண்டு ஒரு நபர் 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து இருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவர்தான் சிகரம் தொடு படத்தை உருவாக்குவதற்கான இன்ஸ்பிரேஷன். இதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த நபரை சந்தித்து பல விஷயங்களை கேட்டு அந்த படத்தை உருவாக்கினேன். அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சார்ந்தவர் இங்கு 70 லட்சம் ரூபாயை மோசடி செய்து சம்பாதித்து அவர் அங்கு பிரம்மாண்டமான வீட்டை கட்டியிருந்தார். சம்பாதிப்பது கடினம், அதை செலவழிப்பது எளிது, அதை திருடுவது அதைவிட எளிது. ஆனால் இதற்கு மூளை அதிகமாக வேண்டும். அதனால் இந்தப் படத்திலும் மோசடிகள் பற்றி நிறைய விவரங்களை சொல்லி இருப்பார்கள். இவை மக்களுக்கு பிடித்தவையாகவும், பயனுள்ளதாகவும் இருந்தால் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும். இன்று கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறுகிறது என்றார்.

விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ எம் வி பிரபாகர் ராஜா பேசுகையில், இந்த நிகழ்விற்கும், மேடையில் வீற்றிருக்கும் படக்குழுவினருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் தொகுதி அருகில் உள்ளதாலும், என்னுடைய நண்பர்களின் அழைப்பின் காரணமாகவும் இதில் கலந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் இது போன்ற நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால் எங்கள் கட்சியின் மறைந்த தலைவர் கலைஞர் ஐயா, தமிழக முதல்வர், தமிழகத்தின் துணை முதல்வர் அனைவரும் திரைத்துறையில் இருந்து தான் வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அந்தக் கட்சியில் இருந்து வந்தவன் என்பதால் இந்த மேடையில் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன்.

இயக்குநர் கே .பாக்யராஜின் காலகட்டத்தில் ஒவ்வொரு திரைப்படங்களும் ஆண்டு கணக்கில் ஓடும். ஆனால் இன்று மூன்று நாள் ஓடிய படங்களுக்கு மெகா ஹிட் என விளம்பரம் செய்கிறார்கள். அந்த அளவிற்கு கால சூழல் மாறி இருக்கிறது.
இன்றுள்ள இளைய தலைமுறையினர் மற்றும் மாணவர்கள் சினிமாவில் இருக்கும் நடிகர்களை பார்த்து தான் தங்களை வழி நடத்திக் கொள்கிறார்கள். இதற்காகத்தான் படத்தில் தோன்றும் கதாபாத்திரங்கள் சிகரெட் பிடித்தால் அதற்கு கீழே எச்சரிக்கை வாசகம் இடம்பெறுகிறது. இருந்தாலும் இன்று கருத்துள்ள படங்கள் அதிகம் வருவதில்லை. இந்தப் படத்தில் மோசடி குறித்து பேசி இருக்கிறார்கள். இன்று அனைத்து துறையிலும் மோசடி இருக்கிறது. இதில் யார் அதிகம் ஏமாறுகிறார்கள் என்றால், படித்தவர்கள் தான் அதிகம். இதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் நம்மிடம் இருக்கும் பேராசை தான்.

சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் என்னை தேடி வந்து பலரும் பத்து லட்சம் கட்டினோம் மோசடி செய்து விட்டார்கள் என்று புலம்புவார்கள், புகார் அளிப்பார்கள். நான் காவல்துறையில் புகார் அளிக்குமாறு பரிந்துரைப்பேன். நமக்கு எது தேவை என்பதை நன்றாக திட்டமிட்டு அளவுடன் வாழ்ந்தால் மோசடியில் சிக்க மாட்டோம். மேலும் மோசடி குறித்து அரசாங்கம் மட்டுமே பணியாற்றினால் இதை தடுக்க முடியாது. மக்களும் ஒருங்கிணைந்து ஆதரவு தர வேண்டும். தமிழக மக்கள் மிகவும் விழிப்பானவர்கள். சிறப்பானவர்கள். இந்த படத்தை பார்த்து, எதிர்காலத்தில் எந்த மோசடியிலும் சிக்காமல் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர்- நடிகர் எஸ். கார்த்தீஸ்வரன் பேசுகையில், எல்லோரும் ஏதேனும் ஒரு மோசடியில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி இருப்போம். இந்த படத்தை உருவாக்கி சிலரிடம் காண்பித்த போது அவர்கள் நாங்களும் ஐந்து லட்சத்தை இழந்திருக்கிறோம், பத்து லட்சத்தை இழந்திருக்கிறோம் என சொன்னார்கள். இவர்கள் எல்லாம் தெரிந்து எப்படி ஏமாறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. இதுபோல் ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தும் மீண்டும் மீண்டும் நாம் ஏமாறிக் கொண்டிருக்கிறோம். மோசடியாளர்கள் வெவ்வேறு பாணியில் தங்களுடைய மோசடியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்றால் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படத்திற்கு பத்து பாகத்தை எடுக்கலாம். என்னால் முடிந்த அளவிற்கு நான்கு வகையான மோசடிகளை இந்த படத்தில் இடம்பெறச் செய்திருக்கிறேன். அதை நேரடியாக சொல்லாமல் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இணைத்து சொல்லி இருக்கிறேன்.

இந்த படத்தில் நாயகனாகவும் நடித்து இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறேன். இதற்கு விதை போட்டவர் இங்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்து வாழ்த்தும் கே. பாக்யராஜ் அவர்கள் தான். ஹீரோவாகவும் நடித்து, இயக்கவும் முடியும் என்ற அவர் கொடுத்த நம்பிக்கையில் தான் நானும் இப்படத்தை இயக்கி நடித்திருக்கிறேன் என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், பொதுவாக எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தான் சொல்வார்கள். ஆனால் உண்மையில் எல்லாப் புகழும் ரசிகப் பெருமக்களுக்கே என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் இல்லை என்றால் இங்கு யாரும் இல்லை.
சினிமாவில் ஆபத்பாந்தவன் என்ற பெயரை ஸ்ரீகாந்த் தேவாவின் தந்தையான தேவா பெற்றிருக்கிறார். நட்சத்திர நடிகர்களுக்கும் இசையமைப்பார். சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கும் இசையமைப்பார். தந்தை வழியில் இன்று ஸ்ரீகாந்த் தேவாவும் பயணிக்கிறார், அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம். அதனை சமூகத்திற்கு நேர்மறையாக பயன்படுத்தாமல் எதிர்மறையாக பயன்படுத்துகிறார்கள். நான் ‘பாக்யா’ இதழில் கேள்வி பதில் எழுதும் போது இது போன்ற விஷயங்களை நிறைய வாசித்திருக்கிறேன். மோசடிகளை பற்றி நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். இது இங்கு மட்டுமல்ல வெளிநாட்டிலும் உண்டு.

இந்தப் படத்தின் கதை என்ன? என்று இயக்குநரிடம் கேட்டபோது அவர் சொன்ன விஷயம் சுவாரசியமாக இருந்தது. நான் ஏமாற்ற பட்டேன். அதனால் மற்றவர்களை ஏமாற்ற நினைத்தேன். இதுதான் சார் லைன் என்றார். அதாவது முள்ளை முள்ளால் எடுக்கும் விஷயம். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது.‌
உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் போது நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடிக்கும். ஆகவே இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

Related Posts

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

Spread the love

Spread the loveபாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென்…

Read more

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

Spread the love

Spread the loveMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !