
ரெய்ன் ஆப் ஆரோஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில், சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில், ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ராஜூ, ஆதித்யா, பவ்யா, மைக்கேல், விக்ராந்த், சார்லி, சரண்யா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பன் பட்டர் ஜாம்”.
கதைப்படி.. சந்த்ரு ( ராஜூ ), ஆதித்யா ( மதுமிதா ) ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர்களது அம்மாக்கள் சரண்யா, தேவதர்ஷினி ஆகிய இருவரும் முடிவு செய்கின்றனர். ஆனால் அந்த திருமணம் அவர்கள் இருவரும் காதலித்து, பெற்றோர் முடிவு செய்த திருமணம் போல் உணர வேண்டும் என பேசி முடிவு செய்கின்றனர். பின்னர் சந்த்ரு கல்லூரியில் நந்தினியை பார்த்ததும் அவர்மீது காதல் வயப்பட, இருவரும் காதல் பறவைகளாக பறக்கத் தொடங்குகிறார்கள். அதேபோல் ஆதித்யாவும் வேறோரு பையனை காதலிக்கிறார்.

இதற்கிடையில் சந்த்ரு தனது நண்பன் சரவணன் ( மைக்கேல் ) மீது அதீத பாசம் வைத்திருக்கிறார். இவர்கள் சிறு வயதிலிருந்தே சந்தோஷமாக நேரத்தை செலவிடும் இடம் பன் பட்டர் ஜாம் கடை தான். அவருக்காக கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களை அடித்து விரட்டுகிறார் சந்த்ரு. பின்னர் சந்த்ரு, சரவணன் நட்பில் விரிசல் ஏற்படுகிறது. பின்னர் சந்த்ரு தனது காதலியையும் ஆதித்யா தனது காதலனையும் பிரிகிறார்கள்.

அதன்பிறகு என்ன ஆனது ? பெற்றோர்களின் ஆசை நிறைவேறியதா ? பிரிந்த காதல் ஜோடிகள் இணைந்தார்களா ? என்பது மீதிக்கதை…
தற்போதைய சமூகத்தில் இளசுகளின் பருவ மாற்றங்களுக்கேற்ப, மனமாற்றம் ஏற்படுவதை நகைச்சுவையோடு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். பிள்ளைகளின் மனதை புரிந்துகொண்டு, அவர்களின் போக்கில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் இயக்குநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அம்மாக்களாக நடித்துள்ள சரண்யா தேவதர்ஷினி இருவரும் தங்களது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை ரசித்து, சிரிக்க வைத்துள்ளனர். சார்லி கதாப்பாத்திரம் ரசிக்கும்படியாக உள்ளது. நட்பு, காதல், பிரிவு, கோபம் என அனைத்து இடங்களிலும் ராஜூ சிறப்பாக நடித்திருக்கிறார். விக்ராந்த் சில இடங்களில் வந்து சென்றாலும் அவரது கதாபாத்திரம் சிறப்பு.
மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.