
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் அம்பேத்குமார் தயாரிப்பில், அதர்வா, நிமிஷா சஜயன், சேத்தன், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சுப்பிரமணியம் சிவா, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிப்பில், நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “டி என் ஏ” ( DNA ).
கதைப்படி.. வசதியான வீட்டுப் பையனான ஆனந்த் ( அதர்வா ) காதல் தோல்வியால் மது, கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி, குடும்பத்தினரால் வெறுக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வருகிறார். அதேபோல் பார்டர் லைன் பெர்சனால்டி டிசார்டர் என்கிற மனநலம் தொடர்பான பிரச்சினையில் இருக்கும் திவ்யா ( நிமிஷா சஜயன் ), தன்னை பெண் பார்க்க வந்த அனைவராலும் புறக்கணிக்ப்படுகிறார். இதனால் அவரது தாய் விஜி சந்திரசேகர் வேதனைப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆலோசனை பெறுகிறார்.

இந்நிலையில் இருவரது குடும்பத்தினர் சம்மதத்துடன் ஆனந்த், திவ்யா திருமணம் நடைபெறுகிறது. திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக செல்கிறது. திவ்யா தாய்மை அடைகிறார். பின்னர் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆண் குழந்தை பிறக்கிறது. இருவரது குடும்பத்தினரும் சந்தோஷமாக இருக்கின்றனர். சிறிது நேரத்தில் அந்த குழந்தைக்குப் பதிலாக வேறொரு குழந்தையை வைத்துவிட்டு யாரோ குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடுகின்றனர். மருத்துவமனை நிர்வாகம், அனைத்து அடையாளங்களும் சரியாக இருக்கும்போது குழந்தை மாறியதாக கூறுவதை ஏற்க மறுக்கின்றனர். ஆனால் திவ்யா உறுதியாக இருக்கிறார்.

அதன்பிறகு தனது குழந்தையை தேடும் முயற்சியில் இறங்குகிறார் ஆனந்த். குழந்தை கிடைத்ததா ? இவர்களிடம் உள்ள குழந்தை யாருடையது ? எதற்காக குழந்தை மாற்றம் ஏற்பட்டது என்பது மீதிக்கதை…
படம் துவங்கும் போதே 1980 என ஆரம்பித்து, மருத்துவமனையில் கனினியை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் கனினி பொதுப் பயன்பாட்டிற்கு வந்ததே 1990 காலகட்டத்தில் தான். தற்போது தாய்மை அடைந்த மூன்றாவது மாதத்திலேயே அனைத்து மருத்துவமனைகளிலும் DNA பரிசோதனை செய்து, சான்றிதழ் வழங்குகின்றனர். இது போன்று ஆங்காங்கே லாஜிக் இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

குழந்தை கடத்தல் சம்பந்தமான கதைகளில், இது ஒரு புதுவிதமான பயணம் என்றாலும் அடுத்தடுத்த காட்சிகளை, பார்வையாளர்கள் யூகிக்கும் படியாக திரைக்கதை நகர்வதால் சுவாரஸ்யம் இல்லாமல் செல்கிறது. இறுதிக்கட்ட காட்சிகள் பிரமாதம். அதர்வா தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நிமிஷா சஜயன் புதுவிதமாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் நடத்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.