
ஶ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில், தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்பு, கே. பாக்கியராஜ் உள்ளிட்டோர் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “குபேரா”.
கதைப்படி.. நாட்டிலேயே மிகப்பெரிய தொழிலதிபரான நீரஜ் ( ஜிம் சர்பு ) ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய அமைச்சர் உள்ளிட்ட ஆளும் வர்க்கத்திற்கு ஒரு லட்சம் கோடி கருப்பு பணத்தை, வெள்ளையாக மாற்றி கொடுப்பதற்காக, சிறையிலிருக்கும் நேர்மையான அதிகாரியான தீபக்கை ( நாகர்ஜுனா ) தேர்வு செய்கிறார். முதலில் மறுப்பு தெரிவித்த தீபக், தன்னை வெளியில் எடுத்ததும் சம்மதிக்கிறார்.

முதலில் ஐம்பதாயிரம் கோடியை அனுப்புவதற்காக வெவ்வேறு பகுதிகளிலிருந்து நான்கு பிச்சைக்காரர்களை தேர்வு செய்கிறார். அவர்களை பினாமிகளாக மாற்றி அவர்கள் மூலம் பணத்தை அனுப்புகிறார் தீபக், அவர்களில் திருப்பதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒருவர் தேவா ( தனுஷ் ). வேலை முடிந்ததும் பினாமிகளை கொலை செய்யும் நீரஜ் கும்பலிடமிருந்து தேவா மட்டும் தப்பிக்கிறார். அந்த கும்பல் துரத்துகிறது.. தேவா ஓடிக்கொண்டே இருக்கிறார். அந்த சமயத்தில் சமீரா ( ராஷ்மிகா மந்தனா ) உதவ அவருடனே தேவாவும் பின்தொடர்கிறார்.
தேவாவை நீரஜ் கும்பல் பிடித்ததா ? தீபக் என்ன ஆனார் ? தேவா, சமீரா இடையேயான உறவு எத்தகையது என்பது மீதிக்கதை…
சட்டவிரோத பண பரிமாற்றம் செய்யும் அதிகார வர்க்கத்தினரின் அட்டகாசங்களை தோலுரிக்கும் விதமாகவும், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து வேலை வாங்கிய விதத்திலும் தான் ஒரு கைதேர்ந்த இயக்குநர் என்பதை நிரூபித்துள்ளார் சேகர் கம்முலா.

அதேபோல் பிச்சைக்காரர் கதாப்பாத்திரத்தில் எத்தனையோ நடிகர்கள் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். உடைந்த கை, குப்பை மேடு, குப்பை வண்டி பயணம் என ஒவ்வொரு காட்சியிலும், கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
நாகர்ஜுனா, ஜிம் சர்பு இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். ராஷ்மிகா மந்தனாவுக்கு குறைவான காட்சிகள் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
படம் இரண்டாம் பாதியில், நீண்ட நேரம் காட்சிகள் இழுத்துக் கொண்டே செல்வதால் பார்வையாளர்களை சோர்வடைய செய்கிறது.