
லெட்சுமி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில், இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு, இயக்கத்தில், விமல், சாயாதேவி, எம்.எஸ் பாஸ்கர், அருள்தாஸ், கூல் சுரேஷ், ஶ்ரீ ரஞ்சனி, மணோஷ் குமார், காதல் சுகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “பரமசிவன் பாத்திமா”.
கதைப்படி.. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமம் ஒன்றில் இந்து, முஸ்லிம், கிருஸ்தவம் என மூன்று பிரிவுகளாக பிரிந்து தனித்தனி குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்து இளைஞர்களும், கிருஸ்தவ இளைஞர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபடுகின்றனர். பின்னர் கிருஸ்தவ குடியிருப்பில் வசிக்கும் இளைஞர் ஒருவரையும், இந்துக்கள் வாழும் குடியிருப்பில் ஒரு இளைஞரையும் பரமசிவன் ( விமல் ), பாத்திமா ( சாயாதேவி ) இருவரும் கொலை செய்கிறார்கள். இதனால் இரண்டு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. இருவரும் மேலும் சிலரை கொலைசெய்ய திட்டமிடுகின்றனர்.

இதற்கிடையில் இரண்டு குடியிருப்பு மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்தி, கொலையாளியை கண்டுபிடிக்க போலீஸ் முயற்சி செய்கிறது. ஆனாலும் குற்ற சம்பவங்களும், மோதலும் தொடர்கிறது. கொலை செய்யப்பட்டவர்களுக்கும் பரமசிவன், பாத்திமா ஜோடிக்கும் என்ன சம்பந்தம் ? எதற்காக கொலை செய்கிறார்கள் என்பது மீதிக்கதை…

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், பிறப்பால் அனைவரும் சமம், மதங்களால் பிளவுபட்டு சண்டையிடாமல், மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தியதோடு, வசதி வாய்ப்புகளுக்காக சிலர் மதம் மாறினாலும், மனதளவில் மாறவில்லை என்பதையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குநர்.
விமல் பரமசிவன் கதாப்பாத்திரத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல் சாயா தேவியும் சிறப்பாக நடித்திருக்கிறார். எம்.எஸ் பாஸ்கர் ஃபாதர் கதாப்பாத்திரத்தில் உடல், மொழி அனைத்திலும் கச்சிதமாக பொருந்தி, கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.