
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (60) கடந்த 18ம் தேதி பள்ளிவாசலில் தொழுகையை முடித்து வீடு திரும்பும் போது, மூன்று பேர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்தனர்.
இதுதொடர்பாக டவுன் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், தொட்டிப்பாலம் பகுதியில் நில சம்பந்தமான மோதலில் இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் கிருஷ்ணமூர்த்தி, அவரது உறவினர்கள் கார்த்திக், அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷா தலைமறைவாக உள்ள நிலையில், அவர் யாருடைய உதவியுடன் மறைந்துள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோர்ட்டில் சில காலங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்ட நூர்நிஷா, சிலரின் ஆதரவை பெற்றிருக்கலாம் என்பதால், அவருக்கு அடைக்கலம் அளித்திருக்கக்கூடிய நபர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதேநேரத்தில், ஜாகீர் உசேன் பிஜிலியின் மகன் இச்சூர் ரகுமான், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி சமீபத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியின் உத்தரவின் பேரில், அவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள நூர்நிஷாவின் இருப்பிடத்தை கண்டறிய, அவருடைய உறவினர்களிடம், குறிப்பாக அவரது சகோதரர் பீர் முகமது உள்ளிட்ட குடும்பத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த கொலை வழக்கில் இவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, தேவையானால் முதல் தகவல் அறிக்கையில் அவர்களது பெயர்களும் சேர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.