
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் பெயர் பலகையில், இந்தி எழுத்துக்கள் சேர்க்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய அறிவியல் அருங்காட்சியகம் உள்ளது. இந்த அறிவியல் மையம் கடந்த 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் வெளிப்புறத்தில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட அறிவியல் மையம் என்று தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பல ஆண்டுகளாக பெயர் பலகை இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, மாவட்ட அறிவியல் மையம் பெருமளவு சேதத்தை சந்தித்தது. இதன் காரணமாக சுமார் 2 கோடி மதிப்பில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிப்புறத்தில் இருந்த பெயர் பலகையை அகற்றிவிட்டு, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளுடன் புதிய பெயர்களை வைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தி மொழி அழிப்பு போராட்டங்களை ஆளும் திமுக அரசு முன்னெடுத்து இருக்கும் நிலையில், மும்மொழி கொள்கை தொடர்பான சர்ச்சை நீடித்து வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தின் பெயர் பலகையில், இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.