
ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’. இப்படத்தில் ரிஷி ரித்விக் நாயகனாகவும், ஆராதியா நாயகியாகவும் நடிக்க, சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு, செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய், சாய்தீனா, மீசை ராஜேந்திரன், ராணுவ வீரர் காமராஜ், குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த ‘குற்றம் தவிர்’ படத்தின் முன்னோட்டம், பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட. விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுகவைச் சேர்ந்த பெங்களூர் புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி, தொழிலதிபர் பிரகாஷ் பழனி, இயக்குநர்கள் ஆர். அரவிந்தராஜ், பேரரசு, பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது.
நாங்கள் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும், படப்பிடிப்புகள் பெரும்பாலும் அங்கே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களையே முழுதாகப் பயன்படுத்தி படம் எடுத்து இருக்கிறோம். ஒரு திரைப்படத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது. அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது. இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தால் மீண்டும் படமெடுப்பேன். அதேபோல் நான் பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பேன். எனவே இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முன்னோட்டம் மற்றும் பாடல்களை வெளியிட்டு இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது, முதலில் கர்நாடகத்திலிருந்து படம் எடுக்க வந்துள்ள இவர்களை வரவேற்கிறேன். இங்கே கதாநாயகன் நாயகி தோன்றிய காட்சிகளைப் பார்த்தேன்.
பொதுவாக இதுபோல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் படத்தின் பாடல்களைப் போடுகிறார்கள், சண்டைக் காட்சிகளைப் போடுகிறார்கள். ஆனால், சென்டிமெண்ட் காட்சிகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ போடுவதில்லை.
இனி அதையும் போட்டுக் காட்ட வேண்டும். அதையும் சேர்த்துக் காட்டுங்கப்பா, அதைப் பார்க்கும் போது தான் நடிகர்களுக்கு நடிப்புக்கான மதிப்பெண் கொடுக்க முடியும். இது ஒரு அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். எப்போதும் நான் வெளிப்படையாகப் பேசுவேன். ஏதாவது குறை இருந்தாலும் சொல்வேன். எனக்கு மனதில் தோன்றியதைச் சொன்னேன். அந்தச் சுவைகளுடன் இந்தச் சுவைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்துள்ளார். அவர் எனது உறவினர் தான். நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் நண்பர் சுவாமிஜி இங்கே வந்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம். என்னை அழைத்து அங்கே பெரிய மரியாதை எல்லாம் செய்தார்கள். இங்கே செண்ட்ராயன் வந்திருக்கிறார் அவர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர் தான். அவர் பிக் பாஸ் ரகசியங்களை இங்கே சொல்ல வேண்டும். பெங்களூரில் இருந்து படம் எடுக்க இங்கே வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றவர் ‘மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே’ என்ற மூகாம்பிகைப் பாடலை முழுதாகப் பாடி முடித்துப் படக் குழுவினரை வாழ்த்தினார்.
இயக்குநர் கஜேந்திரா பேசும்போது, இது எங்களுக்கு முதல் படம். நாங்கள் புதிதாகப் படம் எடுக்க வந்திருக்கிறோம். அனைத்து நடிகர்களையும் சென்னையில் இருந்து வரவழைத்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். தயாரிப்பாளர் இல்லாமல் திரைப்படம் எடுக்க முடியாது. படப்பிடிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் அவர் எங்கள் அனைவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார் என்றார்.
கதாநாயகனாக நடிக்கும் ரிஷி ரித்விக் பேசும்போது, நான் வில்லனாக நடித்து வந்தேன். இப்போது இதில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பருத்திவீரன் படத்தில் பார்த்து நான் வியந்த சரவணன் இப்படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாஸ்கர், எடிட்டர் ரஞ்சித் போன்றவர்களின் ஈடுபாடும் உழைப்பும் சாதாரணமானதல்ல. அனைவரும் சேர்ந்து விருப்பத்தோடு சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம்.
படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

கதாநாயகி நடிகை ஆராதியா பேசும்போது, ‘மதிமாறன்’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ராவுக்கு நன்றி. நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளிவர உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பாளர், அவரது குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி என்றார்.
பருத்திவீரன் சரவணன் பேசும் போது, நான் இதில் வில்லனாக நடித்திருக்கிறேன். இந்த படப்பிடிப்பு பெங்களூர், கர்நாடகா பகுதி என்று நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து படப்பிடிப்புக்காக அங்கே செல்கிறோம் எப்படி இருக்குமோ என்று தயங்கியபடியே சென்றேன். ஆனால் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் அவர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று தங்க வைத்து உபசரித்தது வரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. படப்பிடிப்பின் போதும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள், இப்படிக் கடைசி வரை நடந்து கொண்டார்கள். அவர்களின் அந்த நல்ல மனதிற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். பாடல்கள் சிறப்பாக உள்ளன. தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள் என்றார்.
நடிகர் செண்ட்ராயன் பேசும்போது, இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் நல்ல சம்பளம் கொடுத்தார். பாக்கி வைக்காமல் அவ்வப்போது செட்டில் செய்து கொண்டே இருந்தார்கள். நான் பெங்களூர் படப்பிடிப்பு என்றதும் கர்நாடகாவில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாதே என்று சில கன்னட வார்த்தைகளை எல்லாம் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டு போனேன். ஆனால் அங்கே போய்ப் பார்த்தால் எல்லாருமே தமிழ் பேசினார்கள். பெங்களூரில் உள்ளவர்கள் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு எல்லாமும் பேசுகிறார்கள். அது ஒரு பேன் இந்தியா நகரமாகத் தோன்றியது. அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்றார்.

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது, பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சினிமா எத்தனையோ வளர்ச்சியைப் பெற்று இன்று வளர்ந்து இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலும், கதை இருந்தால் தான் படம் ஓடும். இதில் கதையை நம்பி படம் எடுத்திருக்கிறார்கள். இயக்குநர் தான் எதிர்பார்த்தது வரும் வரை விட மாட்டார். அந்த அளவிற்கு மெனக்கெடுவார். இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம் என்றார்.
நடிகை வினோதினி பேசும்போது,
இயக்குநருக்கு தமிழ் எழுதவே தெரியாது அதனால்தான் டயலாக் பேப்பர் எழுதவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தைச் சிறப்பாக முடித்தார். திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் தான் அடித்தளம். முதலில் தயாரிப்பாளரைப் பார்த்தபோது இந்த படத்தை எப்படி எடுப்பாரோ? என்று நினைத்தேன். இந்தப் படத்தை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பாரோ என்று கேள்வி இருந்தது. ஆனால் அவர் அனைத்தையும் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து, திட்டமிட்டுச் செய்தார். அனைத்தையும் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார். திட்டமிட்டுச் செயல்படுவதில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தினார்.
ஒரு திரைப்பட விழாவுக்கு இத்தனை பேர் வந்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு அவர் உறவுகளைச் சேர்த்து வைத்துள்ளார். இந்த உறவுகளே அவருக்கு வெற்றியைத் தேடித் தரும். இந்தப் படத்தில் நான் ஒரு அம்மா பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அந்தக் குழந்தை சைந்தவி கூட நடித்தது மறக்க முடியாது. முதல் படம் போலவே தெரியவில்லை, சிறப்பாக நடித்தாள். நான் நடித்த அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி என்றார்.
ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ் பேசும்போது, இதுவரை தைரியம், ஐ, மெர்சல், சிங்கம் 3, சுல்தான் போன்ற படங்களில் நான் நடித்திருக்கிறேன், நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறேன், எனது முகநூல் பார்த்து ஐ பட வாய்ப்பு கொடுத்த ஷங்கர் அவர்களை மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் வருகிறேன். சினிமா ஆர்வம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சினிமா அனைத்தையும் கற்றுக் கொடுக்கும், வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள் என்றார்.

ஜெயபிரகாஷ் குருஜி பேசும் போது, எனக்குத் திரை உலகில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் கலந்து கொள்ளும் விழாக்கள் பிற விழாக்கள் பத்து என்றால் சினிமா விழாக்கள் நூறு என்று இருக்கும்.
அந்த அளவிற்குத் திரையுலகில் உள்ளவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். கங்கை அமரன் அப்படி ஒரு நண்பர். தினம் என்னுடன் பேசுபவர். இந்தப் படத்தை வேறு மொழியிலும் வெளியிடுங்கள். வெற்றி பெறும் என்றார்.
அதிமுகவைச் சேர்ந்த ஈ. புகழேந்தி பேசும்போது, குற்றம் தவிர் என்ற படத்தின் தலைப்பே அழகாக இருக்கிறது. இந்த தலைப்புக்காக இந்தப் படம் ஓட வேண்டும். வெற்றியைத் தேடித்தரும். இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். ‘ரத்தக்கண்ணீர் ‘படம் அந்த காலத்தில் எம் ஆர் ராதா நடிப்பில் வெற்றி பெற்ற படம். அது வெளியாகி 60 -70 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் ரத்தக்கண்ணீரு என்று எடுத்தார்கள். அதை எடுத்தவர் எனது நண்பர். நான் அங்கு போய் பார்த்தபோது திரையங்குகளில் எல்லாம் போலீஸ் தடியடி நடக்கும் அளவிற்குக் கூட்டம் அலைமோதியது. படம் பெரிய வெற்றி. இதைக் கேள்விப்பட்டு திருவாரூர் தங்கராசு பெங்களூர் வந்திருந்தார். என்னைக் கேட்காமல் என் அனுமதி இல்லாமல் எப்படி கன்னடத்தில் எடுக்கலாம் என்று சத்தம் போட்டார். அந்தப் படம் எடுத்தவர் நண்பர் மிகவும் நல்லவர். தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர் திருவாரூர் தங்கராசு காலைத் தொட்டு கும்பிட்டார். எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன். ஆனால் இந்தப் படத்தை கர்நாடகா முழுதும் கொண்டு சேர்த்த எனது மகிழ்ச்சி பெரியது என்றார். இருவருமே எனக்குத் தெரிந்தவர்கள். நான் இருவரையும் சமாதானம் செய்து வைத்தேன்.
சினிமா தான் தலைவர்களை கொடுத்தது. சினிமாவில் ஜெயிப்பது நீச்சல் தெரியாதவன் நீச்சல் போட்டிக்கு வருவது போல. எம்ஜிஆர் பாடல் எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. எப்போதும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். எம்ஜிஆர் படங்களில் குற்றவாளியைப் போலீஸ் கைது செய்வது போல் தான் இருக்கும். தண்டிப்பது போல கொலை செய்வது போல இருக்காது. ஆனால் இப்போது படங்களில் எல்லாம் கதாநாயகர்கள் கத்தியைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள் என்றார் ஆதங்கத்துடன்.

இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா பேசும்போது, நான் ஒரு பாடல் காட்சியில் ஆடி நடித்தேன். அதன் படப்பிடிப்பு இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சென்றது. ஒரு குடிசைப்பகுதியில் நடந்தது. சுற்றிலும் மக்கள் கூடி இருந்தார்கள். பத்து மணிக்கு சாப்பாடு வந்திருந்தது. ஆடிய களைப்பு பசியாக இருந்தது. சாப்பிடலாம் என்று திரும்பிப் பார்த்தபோது சாப்பாடு எங்கள் கைக்கு வரவில்லை. தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அதை எல்லாம் கூடி இருந்த மக்களுக்குக் கொடுத்து விட்டார். சில நிமிடங்கள் பொறுத்து இருங்கள் என்று எங்களுக்குப் புதிதாக வரவழைத்துக் கொடுத்தார். அப்படிப்பட்ட நல்ல மனதுக்காரர் பாண்டுரங்கன்.
இந்தப் படத்திற்காக சிவகாசி மாதிரி பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அந்த சிவகாசி வாய்ப்பை கொடுத்த பேரரசு இங்கே வந்திருக்கிறார். என்னை விஜய் படம் கொடுத்துப் பெரிய ஆளாக்கி விட்டவர் அவர். இந்தப் படத்தில் அப்பா பாடல் பாடியது சிறப்பானது. படம் வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.
இயக்குநர் பேரரசு பேசும்போது,
இங்கே பேசியவர்கள் பலரும் எம்ஜிஆர் பற்றிப் பேசினார்கள். எம்ஜிஆர் மட்டும் தான் வில்லனைக் கொல்ல மாட்டார். எந்தப் படத்திலாவது அவர் நம்பியாரைக் கொன்றிருக்கிறாரா ? கெட்டது செய்பவர்களைக் கூட திருந்தத் தான் வைப்பார். அதனால் தான் அவரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதெல்லாம் பழிவாங்க உடனே சுட்டு விடுகிறோம். கர்நாடகாவில் பல மொழி பேசுகிறார்கள் என்றார் செண்ட்ராயன். அப்படியானால் அவர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறார் என்று கூறலாமா?
சினிமாதான் அனைத்து துறையினரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் துறை. இங்கே பாருங்கள் ஆன்மீக துறையினர், அரசியல் துறையினர், ராணுவத்தினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் என அனைவரும் இணைந்து இருக்கிறார்கள். ஒரு துறை விழா என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் சினிமாவில் தான் எல்லாத்துறையினரும் இணைகிறார்கள்.

இங்கே ஸ்ரீகாந்த் தேவா வந்திருக்கிறார் பாடல்கள் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவர் சிவகாசி படத்திற்குப் போட்ட பாடல்கள் வெற்றி பெற்றன. அப்போதெல்லாம் இசையமைப்பாளர்களை மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் என்று அழைத்துக் கொண்டு போய் மெட்டுப்போட வைப்பார்கள். அவருக்கும் வெளிநாடு செல்லலாம் என்று ஆசை இருந்தது. கேட்டுக் கொண்டே இருந்தார்.
தருமபுரி படத்தில் பணியாற்றி வந்த போது விஜயகாந்த் கட்சி தேர்தல் என்று பரபரப்பாக இருந்தார். படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. அங்கே வரவழைத்து கேரவனிலேயே மெட்டுப்பட வைத்தேன். மூன்று பாடல்கள் அங்கேயே போட்டுக்கொடுத்தார். பழனி படம் வந்தபோது பழனிக்கும் திருவண்ணாமலை சமயத்தில் திருவண்ணாமலைக்கும் வரவழைத்து மெட்டுகளை வாங்கினேன். உள்ளூர் பெயரை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டேன். கடைசி வரை அவரது வெளிநாடு கனவு பலிக்கவே இல்லை.
குற்றங்களைத் தவிர்க்க வேண்டும். திரையரங்குகளில் படங்களைப் பார்க்க முடியாமல் இறுகப்பற்று, எம காதகி போன்ற படங்களை ஓடிடியில் பார்க்கும்போது எனக்குக் குற்ற உணர்ச்சியாக இருக்கும். அதுபோன்ற குற்றங்களை இனி தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். பாடல் காட்சிகளைப் பார்த்தோம். கதாநாயகன் ரிஷியும் நாயகி ஆராதியாவும் நன்றாக ஆடினார்கள். பாடல்களைப் பாடும் போது ஆராதியாவுக்கு லிப் மூவ்மெண்ட் சரியாக இருந்தது. ஆனால் ரிஷிக்கு சரியாக அமையவில்லை. கதாநாயகியின் இடுப்பைப் பார்த்துக் கொண்டே ஆடியதால் அதாவது ‘ஹிப்’பைப் பார்த்ததால், ‘லிப்’பைக் கோட்டை விட்டுவிட்டார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.
விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடகத்துப் பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தது , எந்தவொரு தமிழ் திரைப்பட விழாவிலும் காண முடியாத பண்பாட்டுச் செயல் பாடாக இருந்தது.