
தனியார் பள்ளிகளைப் போல் சென்னை மாநகராட்சி பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர் சென்னை மாநகராட்சி அதிகாரிகள். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிறந்த குழந்தைகளின் பெற்றோரின் கைபேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை எடுத்து அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கொடுத்ததும், அவர்கள் சம்பந்தப்பட்ட பெற்றோர்களை தொடர்பு கொண்டு உங்கள் குழந்தைகளுக்கு ஐந்து வயது பூர்த்தியாகி விட்டது. நீங்கள் ஏன் நமது பள்ளியில் உங்கள் குழந்தையை சேர்க்கக்கூடாது ? அரசுப் பள்ளிகள் சார்பில் 14 வகையான இலவசங்களை வழங்கி வருகிறோம். எங்களை நம்பி உங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேருங்கள். என அழைப்பு விடுக்க சொல்லி இருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.
இது நல்ல திட்டமாக இருக்கிறது என நினைத்தாலும், பல பெற்றோர்கள் போன் பண்ணி அழைப்பதால் எங்களுடைய நம்பர் உங்களுக்கு எப்படி கிடைத்தது, போனில் பேசி காசு பறிக்கும் கும்பலோ என சந்தேகத்துடன் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். இதனால் சென்னை மாநகராட்சியும் முறையாக அறிவிப்பு வெளியிடாத நிலையில், ஆசிரியர் தங்கள் நிலையை எண்ணி நொந்து போய் உள்ளனராம்.