
இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் வெண்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மைக்கேல். இவருக்கு சொந்தமான ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருவதாகவும், கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியின் காரணமாக விவசாயம் பொய்த்துப் போனதால், தனக்கு காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை எனக் கூறி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தனக்கு காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என மைக்கேல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுதாரருக்கு இழப்பீட்டுத் தொகையை நான்கு வாரங்களுக்குள் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டும் கூட தற்போது வரை இழுத்து தொகை வழங்காமல் மாற்றி மாற்றி அலைக்கழித்து அலைய விடுவதாக விவசாயி வேதனை தெரிவித்துள்ளார். உடனடியாக மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இழப்பீட்டுத்தொகை வழங்க உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.