
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில் குமார் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சி அமைந்ததும், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2021 முதல் திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே திமுக தேர்தல் வாக்குறுதி 181ன் படி பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றார்கள். இந்த பட்ஜெட் முழுமையான பட்ஜெட் என்பதால், இதிலே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் தினமும் அரசுக்கு கோரிக்கை மனுவை தபால் மூலமாக அனுப்பி வருகின்றார்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை போன்ற பாடங்களை கற்று தருகின்றார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு பகுதிநேர ஆசிரியர்களின் சம்பளத்தை 2,500 ரூபாய் உயர்த்தியதால், தற்போது 12,500 ரூபாய் தொகுப்பூதியம் பெறுகின்றனர்.

13 ஆண்டுகளை கடந்து தற்போது 14 வது ஆண்டில், இன்னும் தற்காலிகமாக பணிபுரிவதால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. இதே பாடங்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்களை போலவே எங்களையும் பணியில் அமர்த்தி காலமுறை சம்பளம் வழங்க இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். இதற்காக அரசு கொள்கை முடிவு எடுத்து 12 ஆயிரம் பேரை தமிழக அரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும்.
எனவே, முதல்வர் பட்ஜெட் அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்ற திமுக வாக்குறுதி நிறைவேற்றுவதை சேர்க்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
—