“டீசல்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Spread the love

தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இவ்விழாவில் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் பேசுகையில், ‘கட்டா குஸ்தி’ படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல நாட்கள் ஆகிவிட்டது. என்னுடைய முதல் படமான ‘அங்காடித்தெரு’, ‘மதகஜராஜா’ எல்லாம் படப்பிடிப்பு முடிந்தும் பல வருடங்கள் காத்திருந்து வெளியாகி ஹிட்டான படங்கள். அதனால், நான் வேலை பார்த்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனாலும் அது ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி.

எடிட்டர் சான் லோகேஷ் பேசுகையில், இந்த தீபாவளிக்கு நல்லதொரு முக்கியமான படமாகவும் ‘டீசல்’ அமையும். ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை இந்த படம் தெளிவாக பேசும். வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி என்றார்.

கலை இயக்குநர் ரன்வன் பேசுகையில், இந்த படத்தின் களமே எங்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது. டீசல் பின்னணியில் சரியான செட் அமைப்பதும் சவாலாக இருந்தது. அதை எல்லோரும் சரியாக செய்திருக்கிறோம் என நம்புகிறேன். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் தங்கதுரை பேசுகையில், ‘டீசல்’ படம் என் கரியரில் மிகவும் முக்கியமானது. நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். தினமும் ஷூட்டிங் போகிறோமா அல்லது நடிகர் சங்க மீட்டிங் போகிறோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு நிறைய நடிகர்கள் இருப்பார்கள். திருவிழா போல படம் எடுத்தார்கள். படமே ஜாலியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சண்முகம் பல நாட்கள் தூங்காமல் வேலை பார்த்திருக்கிறார். ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ படங்களை அடுத்து ‘டீசல்’ படமும் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரும் வெற்றியாக அமையும். அதுல்யாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தின் பாடல்களைப் போலவே படமும் ஹிட்டாக வாழ்த்துகள் என்றார்.

நடிகர் பிரேம்குமார் பேசுகையில்,  எல்லாவிதமான அம்சங்களும் ‘டீசல்’ படத்தில் இருக்கும். டீசலுக்கு பின்னால் நடக்கும் மாஃபியா என்ன என்பதை மிகத் துல்லியமாக இந்த படத்தில் இயக்குநர் சண்முகம் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். ஹரிஷ் கல்யாணுக்கு இப்போது திரைத்துறையில் சரியாக நேரம் கூடி வந்திருக்கிறது. அதுல்யா, வினய் என அனைவரும் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். ‘டீசல்’ தீபாவளியாக அமைய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

நடிகர் ஜார்ஜ் பேசுகையில், இந்த நல்ல படத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது என்றார்.

நடிகர் மேத்யூ பேசுகையில், படக்குழுவினர் அனைவரும் ஜாலியாக வேலை செய்தோம். எவ்வளவு காலதாமதம் ஆனாலும் சரி, பட்ஜெட் கூடினாலும் சரி, தான் நினைத்தபடி படம் வர வேண்டும் என்பதில் இயக்குநர் சண்முகம் உறுதியாக இருந்தார். படம் பார்க்கும்போது அது புரியும். அனைவருக்கும் ‘டீசல்’ தீபாவளி வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், தயாரிப்பாளர்கள் தரப்பு, இயக்குநர் சண்முகம், ஹீரோ ஹரிஷ் கல்யாண் என இவர்கள் எல்லோருக்கும் இந்த படம் எவ்வளவு முக்கியமானது மனப்போராட்டத்தையும் ஆர்வத்தையும்  கொடுத்தது என்பது எனக்கு தெரியும். சரியான தருணத்திற்காக இந்த படம் காத்திருந்தது. பல தலைமுறைகளிடமிருந்து அரசியல் சூழல் பெரும் சொத்தை சுரண்டி அவர்களுக்கே தெரியாமல் எப்படி அவர்களை பலியாக்கினார்கள் என்பதை இந்த படம் சரியாக காட்டி இருக்கிறது. எரிசக்தி தொடர்பான அரசியல் பேசும் படமாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் இது இருக்கும். கரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஹீரோவாக மட்டுமல்லாது சரியான கதையில், தான் பொருந்திப் போகிறோமா என்பதில் ஹரிஷ் கல்யாண் கவனம் செலுத்தியதால்தான் தற்போது அவருடைய படத்திற்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. 11 கோடி ரூபாய் எந்த ஹீரோ மீது முதலீடு செய்யலாம் என யோசிக்கும் பட்டியலில் ‘டீசல்’ படத்திற்கு பிறகு நிச்சயம் ஹரிஷ் கல்யாண் இணைவார். அதுல்யா, வினய், ரிச்சர்ட், உடன் நடித்த அனைவருக்கும் நன்றி என்றார்.

நடிகர் வினய் பேசுகையில், வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் தேவா, இயக்குநர் சண்முகம் இருவருக்கும் நன்றி. என் கதாபாத்திரம் வித்தியாசமானதாக இருக்கும். படம் நன்றாக வந்திருக்கிறது. சினிமாவை வந்த புதிதில் ஈஸியாக நினைத்தேன். ஆனால், அது தவறு என்பதை என் குரு ஜீவா புரிய வைத்தார். அந்த கடின உழைப்பை ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்திற்கு கொடுத்திருக்கிறார். திபு அழகான இசை கொடுத்திருக்கிறார். ரிச்சர்ட் ஒளிப்பதிவு கதைக்கு மிகப்பெரும் பலம். எல்லோருமே சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். தீபாவளிக்கு ‘டீசல்’ மிகப்பெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பேசுகையில், ‘டீசல்’ எனக்கு நல்ல அனுபவம். ‘கனா’ படத்தில் இருந்தே இயக்குநர் சண்முகம் எனக்கு தெரியும் என்பதால் அவருடன் பணிபுரிய எளிமையாக இருந்தது. ‘பச்ச குத்திக்கிட்டு…’ என்னுடைய முதல் கானா பாடல். இந்தப் படமும் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். காமன் மேன் கனெக்ட் உள்ள படம் இது. ஹரிஷ் கல்யாண், அதுல்யா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் ‘டீசல்’ தீபாவளி வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை அதுல்யா பேசுகையில், ‘டீசல்’ படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். நான் உட்பட எல்லோருமே இந்த படத்துடன் எமோஷனலாக கனெக்ட் ஆகி இருந்தோம். தயாரிப்பாளர் தேவா சாருக்கு நிச்சயம் இந்தப் படம் வெற்றி தேடி தரும். நாங்கள் எல்லோரும் ஒரு ஃபேமிலியாக வேலை பார்த்திருக்கிறோம். வாய்ப்பு கொடுத்த சண்முகம் சாருக்கு நன்றி. என் கரியரில் என்றும் நினைத்து பார்க்கும்படியான மிகப்பெரிய ஹிட் சாங் கொடுத்த இசையமைப்பாளர் திபு அவருக்கும் நன்றி. ஹரிஷை எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வம்பிழுப்பேன். வினய், பிரேம் அண்ணா, தங்கதுரை என எல்லோருடனும் பயணித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இவ்வளவு பெரிய நடிகர்கள் குழுவுடன் சேர்ந்து நடித்தது மகிழ்ச்சி. உங்கள் தீபாவளியை ‘டீசல்’ படத்துடன் சேர்ந்து கொண்டாடுங்கள் என்றார்.

இயக்குநர் சண்முகம் முத்துசாமி பேசுகையில், ‘டீசல்’ படம் ஆரம்பித்ததில் இருந்து வெளியீடு வரை எந்த சோர்வும் இல்லாமல் இன்முகத்தோடு உழைத்த நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், பிரேம்குமார், தங்கதுரை மற்றும் என்னுடைய குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஓப்பனிங் பாடல் பாடி கொடுத்த நடிகர் சிலம்பரசனுக்கு ஸ்பெஷல் நன்றி. இந்த காலத்தில் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்ட தயாரிப்பாளர் தேவராஜுலு மார்கண்டேய சாருக்கு நன்றி. காதல் படங்கள், ஃபேமிலி சப்ஜெக்ட் எல்லாம் நிறைய பார்த்தாச்சு. ஏதாவது புதிதாக கதை எழுதலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பெட்ரோல் பங்க்கில் நின்ற டேங்கர் லாரியிலிருந்து பக்கெட் பக்கெட் ஆக பெட்ரோல், டீசலை சிறுவர்கள் திருடி கொண்டிருந்தார்கள். அவர்களை பின்தொடர்ந்து சென்ற போது தான் இந்த அதிர்ச்சிகரமான உலகம் பற்றி தெரிய வந்தது. இதையே படமாக்கலாம் என்று உருவானதுதான் ‘டீசல்’. இதற்குப் பின்னால் இருக்கும் விஷயங்கள் பற்றி நாங்கள் நிறைய தெரிந்து கொள்ள முயற்சித்தபோது உயிர் பயம் வரை அச்சுறுத்தல் நிகழ்ந்தது. இந்த மாஃபியாவால் ஒரு சாதாரண மனிதன் எந்த அளவிற்கு நேரடியாக பாதிக்கப்படுகிறான் என்பதை இதில் சொல்லியிருக்கிறோம். இந்த ‘டீசல்’ படத்தில் நிறைய ரகசியங்கள் இருக்கிறது. டேங்கர் லாரியில் இருந்து எண்ணெய் கொட்டுவது போல தயாரிப்பாளர் தேவராஜூலு இந்தப் படத்திற்காக பணம் கொட்டியிருக்கிறார். ‘பாகுபலி’, ‘கத்தி’ போன்று அடுத்தடுத்து ரூ. 100 கோடி வசூல் செய்யும் பெரிய படங்களை நீங்கள் தயாரிக்க வேண்டும் என்றார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், என்னை நம்பி இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சண்முகம் சாருக்கு நன்றி. ஆக்ஷன் படங்கள் மீது எனக்கு அதீத விருப்பம் உண்டு. ஆனால், அதற்கான சரியான கதை வரும் வரை காத்திருந்தேன். அப்படியான கதையாக எனக்கு ‘டீசல்’ அமைந்தது. தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக பார்க்கப்படும் எரிபொருள் உலகத்திற்கு பின்னால் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்த கதை சொல்லி இருக்கிறது. மக்கள் இந்த படத்தை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தேன். படத்தின் டிரைலர் வெளியான போது பெரிதாக யாரும் திட்டவில்லை. அதுவே எங்களுக்கு பெரிய நம்பிக்கை கொடுத்தது. ஆக்ஷன் படத்திற்கான சரியான மீட்டரை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறேன் என்று டிரைலர் பார்த்த பலரும் பாராட்டினார்கள். பெட்ரோல், டீசல் என எளிய மக்களின் வாழ்வில் முக்கிய இடம் வகிக்கும் இந்த பொருளுக்கு பின்னால் இப்படியான மாஃபியா நடக்கிறதா என்பதை கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். மக்களுக்கான படமாக இது இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சினிமாவை உண்மையாக நேசிக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்காகவே இந்த படம் ஜெயிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த படத்திற்காக 30 நாட்களுக்கும் மேலாக கடலில் ஷூட் செய்து இருக்கிறோம். இந்த சமயத்தில் எங்களுக்கு உதவிய அத்தனை மீனவர்களுக்கும் நன்றி. அதுல்யாவும் சூழலை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்தார். படத்தில் இரவு பகல் பாராமல் உழைத்த தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. நல்ல படம் கொடுக்க வேண்டும் என்பதே என் நோக்கம். தீபாவளிக்கு என் படம் வருவது பெரும் மகிழ்ச்சி என்றார்.

Related Posts

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

Spread the love

Spread the loveபாடகரும், இசைக் கலைஞருமான ஹர்ஷவர்தன் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. திரையிசை பாடலுக்கு நிகராக தற்போது திறமை வாய்ந்த இசை கலைஞர்கள் உருவாக்கும் இன்டிபென்டன்ட் மியூசிக் வீடியோ ஆல்பத்திற்கும் கிடைத்து வருகிறது. ஜென்…

Read more

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

Spread the love

Spread the loveMillion Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் இனிதே வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களை தொடர்ந்து வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !