
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவர் சரணடைந்துள்ளனர். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் சம்பந்தப்பட்ட நபர் வீடியோ வெளியிட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் வெளியிட்டிருந்த வீடியோவில், தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருவதாக மனம் நொந்து பேசியவர், இன்று உயிரோடு இல்லை. அதிகாலையில் பள்ளிவாசலில் இருந்து திரும்பியவர் வெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ஜாகிர் உசேன் பிஜிலியை திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல் படுகொலை செய்திருக்கிறது.

அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், அக்பர் ஷா மற்றும் தச்சநல்லூர் பால் கட்டளையைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய இருவரும் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள். வக்ஃபு வாரியம் தொடர்பான இடப்பிரச்சினை விவகாரத்திலேயே இந்த துணிகர சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அதுவும் கொலை செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோவும் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தவ்ஃபீக் என்பவர் வக்பு வாரியத்திற்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அந்த வீடியோவில் ஜாகிர் உசேன் கூறியிருக்கிறார். எதிர் தரப்பினர் அளித்த பொய் புகாரில் தன்மீது வன்கொடுமை வழக்கு பதியப்பட்டு இருப்பதாகவும், ஆனால் காவல்துறை தனது புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பேசியிருக்கிறார்.

புகாரை சரியாக விசாரித்திருந்தால், தனது தந்தை உயிரோடு இருந்திருப்பார் என ஜாகிர் உசேனின் மகள் வேதனையோடு கூறியுள்ளார். அதே சமயம் குற்றச்சாட்டுகளுக்கு நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி மறுப்பு தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்துவதில் முகாந்திரம் இல்லை என தெரிவித்த அவர், ஜாகிர் உசேன் மீது உரிய ஆவணங்களின் அடிப்படையிலேயே வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கு பதியப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனிடையே டவுன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ஜாகிர் உசேனின் உறவினர்கள், வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்