
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் நிலையத்தில் காதல் ஜோடி வழக்கறிஞர் மூலம் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்த போது, காஞ்சிபுரம் மாவட்டம் கோலி வாக்கத்தைச் சேர்ந்த தீன தயாளன் ஒரக்கடம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், இதே போல் காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசன் தாங்கல் பகுதியைச் சேர்ந்த வினிதா இவரும் அதே தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்கள் கடந்த ஐந்தாண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவர் வீட்டிலும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி இருவரும் சென்னை வில்லிவாக்கம் சுப்பிரமணியர் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டு, செய்யாறு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், வினிதாவின் பெற்றோர் அவரைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர் காதல் ஜோடிகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் செய்யாறு காவல்துறையினர். இதனிடைய காதல் ஜோடிகள் பயத்தில் அலறி துடித்து அழுத காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.