
பிரேக்கிங் பாயிண்ட் பிக்சர்ஸ் (Breaking Point Pictures) நிறுவனம் தயாரிப்பில், எம். கோபி இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘யாதும் அறியான்’ படத்தில் அறிமுக நடிகர் தினேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரானா நடித்திருக்கிறார். இவர்களுடன் விஜய் டிவி KPY ஆனந்த் பாண்டி, ஷ்யாமல், அப்புக்குட்டி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் ஜூலை 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘யாதும் அறியான்’ படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், இயக்குநர் பேரரசு, ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன், நடிகர் செளந்தரராஜன், படத்தொகுப்பாளர் பத்திரிகையாளர் டி.எஸ்.ஆர். சுபாஷ், நடிகர் இயக்குநர் இ.வி.கணேஷ் பாபு, நடிகர் சம்பத் ராம் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் ஆனந்த் பாண்டி பேசுகையில், கலக்கப்போவது யாரு, டான்ஸ் ஜோடி, ’பாவம் கணேசா’, ‘ராஜா ராணி’ தொடர் ஆகியவற்றில் நான் பணியாற்றியிருக்கிறேன். சாருஹாசன் நடித்த ‘தாதா 87’ என்ற படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இப்போது ‘யாதும் அறியான்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. ஒரே ஒரு போன் கால் தான், இப்படி ஒரு படம் இருக்கு பண்றீங்களா ? என்று கேட்டார். இப்படி கேட்கிறீங்களே நீங்க பண்ண சொன்னா பண்ண போறேன், என்று சென்று விட்டேன். நல்ல கதாபாத்திரம் எனக்கு கொடுத்திருக்கிறார். இந்த படத்தை நாம தான் புரோமோட் பண்ணனும் என்று சில வரிககளை எழுதியிருக்கிறேன், அதை இங்கே சொல்ல நினைக்கிறேன், “கரண்டுக்கு தேவை ஒயரு, லாரியா ஓட்ட வேண்டும் டயரு, யாதும் அறியான் படம்னாலே ஃபயரு..”, “பரீட்சை எழுதுனா போடுவாங்க பாஸ், யாதும் அறியான் படம் எப்பவுமே மாஸ்”, படம் நிச்சயம் கலக்கலாக இருக்கும். பல ஆண்டுகளாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றி வந்தாலும், 2016 ஆம் ஆண்டு தான் எனக்கு அங்கீகாரம் கிடைத்தது, அதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான். அவரோட வாய்ஸ் பேச ஆரம்பித்ததும் நான் வெளியே தெரிய ஆரம்பித்து விட்டேன், அதன் பிறகு தான் எனக்கு நிறைய வாய்ப்புகள் வர தொடங்கியது. இந்த படத்தையும், படக்குழுவையும் சிவகார்த்திகேயன் வாழ்த்தியிருக்கிறார். படம் சூப்பரா வந்திருக்கிறது.
நாங்கள் வாய்ப்பு தேடும் போது பூந்தமல்லியில் இருந்து சாலிகிராமம் வருவோம், தூரமாக இருப்பதால் சாலிகிராமத்தில் ரூம் எடுத்து தங்கி விடலாம் என்று நண்பர்கள் சொல்வார்கள். ஆனால், இப்போது சாலிகிராமத்தில் இருப்பவர்களை விட இன்ஸ்டாகிராமில் இருப்பவர்களுக்கு தான் வாய்ப்பு தருகிறார்கள். சாலிகிராமத்தில் நிறைய பேர் வாய்ப்பு தேடிக்கொண்டு கஷ்ட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு இந்த படத்தில் வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள், அதை நான் சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்றார்.
நடிகர் சம்பத் ராம் பேசுகையில், இந்த படத்தின் ஹீரோ தினேஷ், பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் போலவே தெரியவில்லை, மிக சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் பஞ்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே தினேஷ் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடிப்பார் என்று நம்புகிறேன். இயக்குநர் கோபி சிறப்பாக இயக்கியிருக்கிறார், டிரைலர் மிக சுவாரஸ்யமாகவும், படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டும்படி இருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது, இசையமைப்பாளருக்கு வாழ்த்துகள். அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அப்புகுட்டிக்கு வாழ்த்துகள். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

படத்தொகுப்பாளர் டி.எஸ்.ஆர். சுபாஷ் பேசுகையில், நாயகன் தினேஷ் அனைவருடனும் எளிமையாக பழக கூடியவர். அவரது எளிமை அவரை பெரிய உயரத்திற்கு கொண்டு போகும். இயக்குநருக்கு இந்த நேரத்தில் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்ள வேண்டும், காரணம் அப்புக்குட்டி உள்ளிட்ட பலருக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவர் யாரை வேண்டுமானாலும் நடிக்க வைத்திருக்கலாம், ஆனால் அப்படி செய்யாமல் புதியவர்களுக்கும், வளர்ந்து வருபவர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். பத்திரிகையாளர் சகோதரர்கள், யார் யாரோ முன்னேற உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். நம்ம குடும்பத்தைச் சேர்ந்த தினேஷுக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசுகையில், ஒரு படத்தின் டிரைலர் அந்த படத்தின் தரத்தை நிர்ணயிக்கும், அதுபோல் இந்த படத்தின் டிரைலர் இந்த படம் ஒரு சிறப்பான படமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. பல படங்களின் டிரைலரை நாம் பார்க்கிறோம், ஆனால் யாதும் அறியான் டிரைலர் மிக சிறப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைப்பதற்காக தினேஷ் என்னிடம் தொலைபேசியில் பேசினார், அப்போது அவர் மீது எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. பிறகு டிரைலரை அனுப்ப சொல்லி பார்த்தேன், வியந்து விட்டேன். மிக சிறப்பாக நடித்திருக்கிறார். டிரைலரும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக பின்னணி இசை மிக சிறப்பு. இங்கு வந்ததும் இசையமைப்பாளர் யார் ? என்று கேட்டு அவரை பாராட்டினேன். அதேபோல் டிரைலரை எடிட்டர் நிரஞ்சன் சிறப்பாக கட் செய்திருக்கிறார். டிரைலரை பார்க்கும் போது படம் பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது. இந்த குழு பெரிய வெற்றியடைய வேண்டும், என்று வாழ்த்துகிறேன் என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், படத்தின் நாயகன் தினேஷ் பத்திரிகை துறையில் இருக்கிறார். பல்வேறு துறைகளில் இருந்து சினிமாவுக்கு வருவார்கள், அவர்கள் ஒரு ஆர்வத்தில், ஆசையில் வருவார்கள். அப்படி தான் தினேஷையும் நினைத்தேன், ஆனால் தினேஷிடம் முழுமையான நடிகருக்கான தகுதி இருக்கிறது. அவரிடம் கலை வெறி இருக்கிறது, அதற்காகத் தான் இப்போதும் கொலை வெறியோடு உட்கார்ந்து இருக்கிறார். காதல் மன்னன் ஜெமினி கணேசன் இருந்தார், அவருக்குப் பிறகு காதல் இளவரசன் கமல்ஹாசன் வந்தார். அதன் பிறகு யாரும் இல்லை, இந்த டிரைலரை பார்த்த போது, அதில் வந்த பெட்ரூம் காட்சியில் மனுஷன் பூந்து விளையாடியிருக்கிறார். எல்லாமே செய்துவிட்டு லவ் என்று சொல்லும் இடம் செமையாக இருந்தது. அந்த காட்சிக்காக தான் அவர் கதையை ஒத்துக்கொண்டு இருப்பார் போல. கொஞ்சம் மூட் அவுட் ஆனவுடன், செல்போனை பார்த்து மூடை ஏத்திக்கிறாரு, பாக்யராஜ் முருங்கைக்காய் பற்றி சொன்னார். இந்த படத்தின் மூலம் இயக்குநர் புது யோசனையை சொல்லியிருக்கிறார். செல்போனை பார்த்து மூட் ஏத்துறது. அந்த ஒரு காட்சியில் தினேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார், இந்த படத்திற்கு அந்த ஒரு காட்சி போதும். ஹீரோயின் வராததற்கு காரணமும், தினேஷ் இன்னும் அந்த மூட்ல இருந்து மாறாம இருப்பாரோ என்று பயந்து இருப்பாங்க. ஆனால், காதல் காட்சி, செண்டிமெண்ட் என அனைத்து இடங்களிலும் தினேஷ் சிறப்பாக நடித்திருந்தார். இந்த படத்திற்குப் பிறகு அவர் பத்திரிகையாளர் என்பதை ஓரமாக வைத்துவிட்டு முழுநேர நடிகராகி விட வேண்டும், அதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் இருக்கிறது.
ஒரு ஆக்ஷன் படம், ஒரு மாஸ் ஹீரோவை வைத்து பண்ணும் போது, அந்த ஹீரோவை இயக்குநர் நேசிக்க வேண்டும், அப்போது தான் அந்த படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக வரும். அதேபோல் காதல் காட்சிகள் நன்றாக வர வேண்டும் என்றால் அந்த ஹீரோயினை காதலிக்க வேண்டும், மனதளவில் பீல் பண்ணி ரசிக்க வேண்டும், அப்போது தான் நாம் அந்த காட்சியை எடுத்தால் ஆடியன்ஸ் ரசிப்பார்கள். இதுல கோபி இரண்டையும் செய்துவிட்டார். கதாநாயகியையும் லவ் பண்ணிட்டாரு, ஹீரோவையும் லவ் பண்ணிட்டாரு. இசை சிறப்பாக இருக்கிறது, மிரட்டியிருக்கிறார்கள். படத்தொகுப்பு உள்ளிட்ட அனைத்தும் நன்றாக இருக்கிறது. இயக்குநர் கோபி மிகப்பெரிய இயக்குநராவதற்கு அனைத்து தகுதியும் இருக்கிறது. தினேஷ் பெரிய ஹீரோவாகி விடுவார். இயக்குநர் கோபி பெரிய ஹிட் படம் கொடுப்பார் என்றார்.

படத்தின் நாயகன் தினேஷ் பேசுகையில், நான் இப்படி இரத்த கரை படிந்த சட்டையுடன் வருவதற்கு இயக்குநர் தான் காரணம், படம் வெளியாகும் வரை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லிவிட்டார். இந்த ஒரு நிமிஷத்துக்காகத்தான் இத்தனை வருடங்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். நானும் மீடியா ஃபேமிலியில் இருந்து தான் வந்திருக்கிறேன், நீங்கள் எனக்கு உத்துழைப்பு கொடுத்து இந்த படத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும். இந்த கதையை இயக்குநர் என்னிடம் பீல் பண்ணி சொன்னார், அதனால் தான் நான் ஒத்துக்கொண்டேன். நான் உங்க வீட்டுப்பிள்ளை, என்னை உச்சத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றாலும், ஒரு நல்ல நடிகர் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் புதுமுகங்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்கள் தான், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்க இங்கு வந்தது எனக்கு பூஸ்ட் போல் இருக்கிறது என்றார்.
நடிகர் அப்புக்குட்டி பேசுகையில், இந்த படத்தில் சிறந்த கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் கோபிக்கு நன்றி. எனக்கு காட்சியை சொல்லாமலேயே நடிக்க வைத்தார். ஹீரோ யார் என்று கேட்கும் போது, கண்ணாடி போட்டுக்கொண்டு தினேஷ் வந்தார். அவர் பட்டைய கிளப்பிட்டாரு, செமயாக நடித்திருக்கிறார். அவர் தினமலர் குடும்பம் என்று தெரியாது, பிறகு தான் தெரிந்தது. தெரிந்த உடன் அவரிடம் நான் பயந்தால், அவர் என்னிடம் பனிவோடு அடக்கமாக பேசுகிறார். ஆனந்த் பாண்டி சிறப்பாக நடித்திருக்கிறார். அனைவரும் ஒரு குடும்பமாக ஜாலியாக நடித்தோம். சுற்றுலா போனது போல் தான் இருந்தது. படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.
படத்தின் இயக்குநர் கோபி பேசுகையில், இந்த வெளிச்சத்தில் என்னை பேசவைத்த டெக்னீஷியன்களுக்கு நன்றி. டிரைலரில் என்னவெல்லாம் இருந்ததோ அது அனைத்தும் படத்தில் இருக்கும். என்னை பற்றியும், படம் பற்றியும் பேசும் போது எனக்கு பயமாக இருந்தது. அதனால், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி படம் பாருங்கள். இந்த படத்தை குறிப்பிட்ட ஒரு பட்ஜெட்டில் செய்ததால், ஒரு காட்சியில், ஒரு பேப்பர் போஸ்டரில் வைத்தேன், பெரிய பட்ஜெட்டாக இருந்தால் கிராபிக்ஸ், ஏஐ மூலம் அவரை காண்பித்திருப்பேன், பான் இந்தியா படமாக இருந்தால் முதல்வராக அல்லாமல் அவரை பிரதமராக காட்டியிருப்பேன். அதனால், விஜய் சாரின் ரெபரன்ஸ் எனது அடுத்தடுத்த படங்களில் இருக்கும். எங்கள் படத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என்றார்.