
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டியிலிருந்து ஐவர் மலை செல்லும் சாலையில் பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வேண் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நான்கு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் விபத்து குறித்து அப்பகுதியினர் கூறுகையில், பாப்பம்பட்டி, ஐவர் மலை செல்லும் சாலையில் நாள்தோறும் மணல் லாரிகள் இடைவிடாமல் சாரை சாரையாக எப்போதும் சென்றுகொண்டே இருக்கும். இந்த குறுகலான சாலையில் அதிவேகமாக லாரிகள் செல்வதால், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், விவசாயிகள் என அனைவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுதான் செல்கின்றனர்.

அதேபோல்தான் இன்றும் பெண் பணியாளர்கள் சென்ற வேன் அந்த வழியாக சென்றபோது, மணல் லாரி தாறுமாறாக வந்ததால், வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்ததாக கூறுகின்றனர். இதுசம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.