
மத்திய அரசு 2026 ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை மறு வரையறை செய்தால், தங்கள் மாநிலத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்து, நாடாளுமன்றத்தில் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்பதால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அந்த வகையில் முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையில், நியாயமற்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கேரளா, தெலுங்கானா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய நான்கு மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். அது மட்டும் இன்றி இருபதுக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வலியுறுத்தி தீர்மானம் உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு, தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டும் வகையில், பாரம்பரிய உடைகள், உணவுகள் வரை அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதாவது பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டு புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அது மட்டும் இன்றி தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு, விருந்தினர்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.