
இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில், நடிகர் டோவினோ தாமஸ் பேசியதாவது… இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை, இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், பிரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட் மிகப்பெரிது. இந்தப்படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். மலையாள சினிமாவில் இது முக்கியமான படம் என்றார்.
இசையமைப்பாளர் தீபக் தேவ் பேசியதாவது, எல்லா இசையமைப்பாளருக்கும், இது போலப் பெரிய படம் செய்ய வேண்டும் என ஆசை இருக்கும். லூசிஃபர் போலவே இந்தப்படமும் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இப்படம் எனக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். இந்தப்படம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்றார்.

நடிகை மஞ்சு வாரியர் பேசியதாவது.. என் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையைத் தந்த படம் லூசிஃபர். எனக்கு இந்த வாய்ப்பை தந்த பிரித்திவிராஜுக்கு நன்றி. பிரியதர்ஷினி எனும் கதாபாத்திரத்தை எனக்குத் தந்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இவ்வளவு பெரிய படமாக இப்படத்தை உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. லாலேட்டனுடன் ஒரு சில படங்கள் மட்டும் தான் செய்துள்ளேன், இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை, எல்லாமே மறக்க முடியாத அனுபவம். இப்படம் கண்டிப்பாக அனைவரையும் திருப்திப்படுத்தும்.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா பேசியதாவது.. இந்தப்படத்தின் முதல் பாகம், மிக எளிதாகச் செய்துவிட்டோம். அப்போது இத்தனை பதட்டம் இல்லை, ஆனால் இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு, நிறையப் பதட்டம் இருந்தது. இயக்குநராக பிரித்திவிராஜுக்கு நான் ஃபேன் ஆகிவிட்டேன், அவர் என்னிடம் கதை சொன்ன பிறகு, தூக்கமே வரவில்லை என்றார். அத்தனை அர்ப்பணிப்போடு படத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார். மிக அழகாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனிக்கு நான் ரசிகன், மிகப் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களைப் பிரமிக்க வைக்கும் என்றார்.

நடிகர் அபிமன்யூ சிங் பேசியதாவது.. மோகன்லாலுடன் ஒர்க் செய்ய வேண்டும் என்கிற கனவு, இந்தப்படம் மூலம் நனவாகியுள்ளது. அவரது இத்தனை வருட அனுபவத்தை அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அது எனக்குக் கிடைத்த ஆசீர்வாதம். பிரித்திவிராஜ் மிகச்சிறந்த இயக்குநர், ஒரு நடிகராக அவர் இருப்பதால் அவரால் எளிமையாக நடிப்பை வாங்க முடிகிறது. இந்தப்படத்தை மிக அருமையாக எடுத்துள்ளார். எனக்குப் படிக்கும் காலத்தில் நிறைய மலையாள நண்பர்கள் இருந்தனர், அவர்கள் மூலம் மலையாளப்படம் பார்ப்பேன், இப்போது மலையாளப் படங்கள் இந்தியாவிலேயே மிகப்பெரிய தொழில்நுட்ப தரத்துடன், பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் கார்த்திகேயா தேவ் பேசியதாவது.. நான் சலார் படத்தில் பிரித்திவிராஜின் சின்ன வயது கேரக்டர் செய்தேன், பிரசாந்த் நீல் என் நடிப்பைப் பார்த்து பிரித்திவிராஜிடம் அறிமுகப்படுத்தினார். அவர் என்னை இந்தப்படத்திற்கு காஸ்ட் செய்தார். அவருக்கு என் நன்றி. மோகன் லாலுடன் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது பெருமை. அவர் ஒரு லெஜெண்ட். இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய படமாக இருக்கும் என்றார்.

மொழி மாற்று இயக்குநர் RP பாலா பேசியதாவது.. நான் முதலில் புலிமுருகன் படம் செய்தேன், பின்னர் லூசிஃபர் படத்திற்குச் செய்த போது, மோகன்லாலை டப்பிங் பார்க்க அழைத்தேன் ஆனால் வரவே மாட்டேன் என்றார், என் கட்டாயத்தால் பார்க்க வந்தார், பாதி படம் பார்த்து சூப்பராக செய்திருக்கிறாய் எனப் பாராட்டினார். அப்போதே எம்புரான் நீங்கள் தான் செய்கிறீர்கள் என்றார். அவரால் தான் என் வாழ்க்கை மாறியுள்ளது. என் வாழ்க்கையை புலி முருகனுக்கு முன் புலி முருகனுக்குப் பின் எனப் பிரிக்கலாம், நான் இன்று நன்றாக இருக்கக் காரணம் அவர் தான், இந்தப்படமும் மோகன்லால் கலக்கியிருக்கிறார் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் பிரித்திவிராஜ் பேசியதாவது… என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான நிகழ்வு, முதல் பாகம் வந்த போது இப்படத்தை இந்திய அளவில், வெளியிடும் வசதி, படத்தைப் பற்றிப் பேச வைக்கும் வசதி இல்லை. இந்த 6 வருடத்தில் பல விசயங்கள் மாறியிருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அவரவர் மொழியில் ரசிக்கும் வண்ணம் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப்படம் மலையாள சினிமாவின் பெருமை, இப்படி ஒரு படம் செய்யக் காரணமான மோகன்லால், ஆண்டனி பெரும்பாவூர் ஆகியோருக்கு நன்றி. அனைவரும் படம் பார்த்து ரசியுங்கள் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

நடிகர் மோகன்லால் பேசியதாவது… இது ஒரு டிரையாலஜி படம், லூசிஃபர், இப்போது எம்புரான் அடுத்து இன்னொரு படம் வரவுள்ளது. இது மலையாள சினிமாவுக்கே மிக முக்கியமான படம். கொஞ்சம் புதுமையாகப் பல விசயங்கள் முயற்சி செய்துள்ளோம். அதற்காகத் தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இது தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாதிரி படம் ஓடினால் தான் பல பெரிய படங்கள் வரும். அதற்காகவும் இப்படம் ஓட வேண்டும். உங்களைப் போல நானும் மார்ச் 27 ஆம் தேதி, ரிலீஸுக்கு காத்திருக்கிறேன் என்றார்.