
விண்வெளி ஆராய்ச்சி பணிக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டார் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ். பட்ஸ் வில்மோர் என்பவருடன் போயிங் நிறுவனத்தின் ஸ்டார் லைனர் விண்கலத்தில் பறந்த சுனிதா விண்வெளி நிலையத்தை அடைந்து ஆராய்ச்சியையும் தொடங்கினார்.

பூமிக்கு திரும்ப கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திட்டமிட்டு இருந்த நிலையில், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது நடைபெறாமல் போனது. இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசா கைகோர்க்க, அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இறுதியில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரு டிராகன்-9 வெண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதில் அனுப்பப்பட்ட நான்கு வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைய அவர்களை மகிழ்ச்சி ததும்ப வரவேற்றார் சுனிதா.

பூமிக்கு திரும்புவதற்கான ஆயத்த பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில், சுனிதா வில்லியம்ஸ், பட்ஸ் வில்மோர், அமெரிக்க வீரர் நிக் ஹாக், ரஷ்யாவின் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் டிராகன் விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்தது.

இந்த ஒன்பது மாத பயணத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கிறார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளியில் உணவு உற்பத்தி செய்ய லெட்யுஸ் கீரைச்செடி வளர்ப்பு குறித்த ஆய்வு, விண்வெளி நிலைய காற்றில் கலக்கும் நீரை பிரித்து எடுக்கும் புதிய கருவி பற்றிய பரிசோதனை என்று அவரது பணிகள் தொடர்ந்தன. டிராகன் விண்கலம் மூலம் இன்று அதிகாலை வேளையில் ஃப்ளோரிடாவில் சுனிதா வில்லியம்ஸ் உள்பட நான்கு வீரர்களும் தரையிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நிகழ்வை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கிறது.