
டாஸ்மாக் முறைகேட்டை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தை பாஜக முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டின் முன் 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குறிக்கப்பட்டனர். தொடர்ந்து காவல்துறையின் தடையை மீறி போராட்டத்துக்கு புறப்பட்டபோது தமிழிசை கைது செய்யப்பட்டார். அவருடன் பாஜக தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளையும் காவல்துறை வீட்டு காவலில் வைத்துள்ளது.

இதற்கிடையே பாஜகவினர் கைதுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், திமுக அரசின் ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் இன்று சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடை நடுங்கி திமுக அரசு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசை போட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களை கொண்டு கீழ் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாக போராட்டம் அறிவித்து முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால் தானே உங்களால் இது போன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது. தேதியே அறிவிக்காமல் திடீரென்று ஒரு நாள் நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் பங்கேற்க பனையூரில் உள்ள தனது இல்லத்திலிருந்து அண்ணாமலை புறப்பட்ட நிலையில், அக்கரையில் வைத்து காவல்துறை அவரை கைது செய்தது.