
தமிழக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள தெலுங்கனூர், காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கிறது. சேலம் மாநகரின் மையப் பகுதியில் இருந்து 71 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம். தெலுங்கனூரை சுற்றியுள்ள மாங்காடு, கோரப்பள்ளம், மற்றும் பண்ணவாடி ஆகிய இடங்களில் 500க்கும் மேற்பட்ட கல்வட்டங்கள் காணப்படுகின்றன. இந்த இடத்தை இப்பகுதி மக்கள் பாண்டியன் திட்டு என்று அழைக்கிறார்கள்.
தெலுங்கனூரில் இரண்டு மெருகூட்டப்பட்ட கல் கருவிகள், இரும்பு பொருட்கள் மட்டுமின்றி 4.7 சென்டிமீட்டர் அகலம், 88 சென்டிமீட்டர் நீளத்துடன் கூடிய வால் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எஃகால் செய்யப்பட்ட இந்த வால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தெலுங்கனூரில் கிடைத்த வாலியின் வயது சுமார் 3460 ஆண்டுகளாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதேபோன்று மாங்காட்டில் கிடைக்கப்பெற்ற இரும்பு பொருளின் தற்போதைய வயது 3629 ஆண்டுகள் என அறியப்பட்டுள்ளது.

தெலுங்கனூருக்கு அருகில் உள்ள மூலக்காடு மற்றும் மாங்காடு ஆகிய இடங்களில் உள்ள கல்வட்டத்தில், மேற்கு நோக்கி கல்லறைகள் தெலுங்கனூரில் காணப்பட்ட குழி அடக்க கல்லறைகளை விட முந்தையவை என்று கூறப்படுகின்றன. மேலும் இங்கு உள்ள கல் திட்டுகளை இப்பகுதி மக்கள் குள்ள மனிதர்கள் வாழ்ந்த இடம் என்று குறிப்பிடுகிறார்கள். தெலுங்கனூரில் அகழாய்வு செய்ய திட்டமிட்டு இருப்பதால், இதன் தொன்மை விரைவில் வெளிப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.