
மதுரை விமான நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஈச்சனேறி பகுதியில் பாதி எரிந்த நிலையில், அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் கிடந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பெருங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில், கைப்பற்றப்பட்ட அந்த சடலம் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முக்குலத்தைச் சேர்ந்த மலையரசன் என்பதும், இவர் சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் பணிபுரிந்த தனிப்படை காவலர் என்பதும் தெரியவந்துள்ளது.

முன்னதாக இவரது மனைவி பாண்டி செல்வி கடந்த 1 ஆம் தேதி மானாமதுரை பகுதியில், வாகன விபத்தில் காயம் ஏற்பட்ட நிலையில், மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த ஐந்து நாட்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து காவலர் மலையரசன் மனைவி மரணம் குறித்து சிந்தாமணி பகுதியில் உள்ள மருத்துவமனையில் ரசீது உள்ளிட்ட ஆவணங்களை வாங்குவதற்காக வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஈச்சனேறி பகுதியில், பாதி எரிந்த நிலையில் மலையரசன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மலையரசனின் உடலை, உறவினர்கள் பார்த்து உறுதி செய்ததை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றவாளியை கைது செய்யும் முறை சடலத்தை வாங்க மாட்டோம் என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.