
திராவிட இயக்க பற்றாளர், வழக்கறிஞர், எழுத்தாளர், நீண்டகால அரசியல் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி கே.எஸ் ராதாகிருஷ்ணன், திமுகவிலிருந்து நீக்கப்பட்டதால், எந்த அரசியல் கட்சியிலும் சேராமல், தனக்கு தோன்றிய கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவது, புத்தங்கள் எழுவது, இலக்கிய விழாக்களில் பங்கு பெறுவது என இருந்து வருகிறார். இந்நிலையில் திமுகவில் இருப்பவர்கள், நீங்கள் இவ்வளவு காலம் திமுகவில் இருந்தவர், ஆளும்கட்சி குறித்து விமர்சனம் செய்யலாமா ? என பலவழிகளில் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் கே.எஸ் ராதாகிருஷ்ணன் கூறுகையில்…
திமுகவில் அவ்வளவு காலம் நீங்கள் பணியாற்றிவிட்டு இப்பொழுது திமுகவை குறை சொல்வதில் நியாயம் தானா ? என்று நண்பர்கள் சிலர் அக்கறையாகக் கேட்கிறார்கள் ! இன்று வந்து என்னிடம் கேள்விகள் கேட்பவர்கள் யாராவது ஒருவர் நேர்மையாக என்னை திமுக தலைமை நீக்கியது தவறுதான் என்று பேசியதும் கேட்டதும் உண்டா ? நான் திமுகவில் பணியாற்றி பெற்ற ஆதாயம் ஒன்றும் இல்லை. உண்மையில் இழந்தது தான் அதிகம். அதே திமுகவில் நியாயமாக இருந்து கால நேரம் பாராமல் உழைத்துக் கொடுத்தும் என்னை அவர்கள் நீக்கியபோது இதே நியாயத்தை அவர்களிடம் இப்போது பேசுபவர்கள் கேட்டிருக்க வேண்டும் தானே !
கடந்த காலத்தில் திமுகவிலிருந்து என்னை நீக்கிய போது, அது தவறு என்று யாரும் இதுவரை ஆதரவாகப் பேசியதில்லை ! முக்கியமாகச் சொன்னால் நான் கலைஞருக்கு மிகவும் வேண்டப்பட்டவனாக இருந்தேன்.
ஆனால் ஸ்டாலினுக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டும் என்னை ஏனோ பிடிக்கவில்லை. ஈழத் தமிழர் விஷயத்தில் திமுகவின் மீது இருந்த களங்கத்தை நீக்கும் விதமாக அதற்காக நான் முழு மூச்சோடு செய்த டெசோ பணிகள் எதுவுமே அவர்கள் ஞாபகத்தில் இல்லை. அதேபோல் கலைஞர் நள்ளிரவில் கைதின்போது அந்த சி டி யைக் கொண்டு போய் சன் டிவியில் காட்டியதும், அதேபோல் டெசோ மாநாட்டில் எனது பணிகள், இதே ஸ்டாலின் ஐநா சபைக்கு நான் தயாரித்த ஆவணங்களுடன் சென்றதும், மேலும் லண்டன் பிரிட்டிஷ் பார்லிமெண்டில் நான் அழைத்துப் போய் பேச வைத்ததற்கும் அடியேன் காரணமாக இருந்தவன் என்பதையும் கூட யாரும் பேசுவதில்லை ! அதேபோல் கனிமொழி திருமண முறிவு விவாகரத்திலும் தலையிட்டு யாருக்கும் தெரியாமல் அதை சட்டப்படி முடித்துக் கொடுத்திருக்கிறேன் என்பதையும் கூட மறந்து விட்டார்கள் போலும்.

அதேபோல ஜெயலலிதாவின் ஊழல் விவகாரத்திற்கான ஆதாரங்களை முரசொலி மாறனும், கலைஞரும் கேட்டபோது அதைத் திரட்டிக் கொடுத்ததையும் கூடவா மறப்பார்கள் ! இப்படி பல பணிகள் இவ்வளவு உதவி செய்தும் என்னை திமுகவிலிருந்து நீக்கம் செய்த போது எந்த வகையில் நியாயம் என்று யாரும் கேட்டது கூட இல்லை. எல்லோரும் கப்சிப் என்று வாயை மூடிக் கொண்டிருந்தார்கள். கலைஞர் களப்பணி செய்யும் அறிவாளிகளை மதிக்கத் தெரிந்தவர்.
இப்போது அதிமுகவின் அல்லது ஜெயலலிதாவின் முகமாகவே திமுகவை ஸ்டாலின் மாற்றிக் கொண்டு விட்டார். செந்தில் பாலாஜி, சேகர் பாபு, செல்வகணபதி, எ வ வேலு. இந்த எ வ வேலு ஜெயலலிதா குறித்து ஆங்கிலத்தில் புத்தகம் வெளியிடும் அளவிற்கு தயாராக இருந்தார். அதேபோல் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் ஜெயலலிதாவின் காலிலே விழுந்து கிடந்தார். இப்படி ஆட்களை எல்லாம் உள்ளே இழுத்துக் கொண்டுவந்து ஏறக்குறைய திமுகவை அதிமுகவின் முகமாகவே மாற்றிவிட்டார்கள். அதையெல்லாம் ரசிக்கிறவர்கள் இவ்வளவு தூரம் திமுகவில் உழைத்திருக்கிறேன் என்பதை மறந்து விட்டு அவ்வளவு ஈசியாக என்னை நீக்கம் செய்ததற்கு நியாயம் கேட்டு யார் வாயைத் திறந்தார்கள் என கேட்கிறேன்.
இப்போது வந்து நீ சங்கி ஆகிவிட்டாய், விஜயின் த.வெ.க வை ஆதரிக்கிறாய் என்றெல்லாம் கேட்பதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. இன்றைக்கு வந்தவனெல்லாம் திமுகவில் அமர்ந்து கொண்டு இதை எல்லாம் பேச என்ன யோக்கியதை இருக்கிறது ?
காங்கிரசை அல்லது மல்லிகார்ஜுனன் கார்கேவை விமர்சித்தேன் என்பதற்காகக் கூட இருக்கட்டும், அப்படி என்றால் மிக மோசமாகக் காங்கிரஸை விமர்சித்த கண்ணப்பன் போன்றவர்கள எப்படி உங்கள் ஆட்சியில் அமைச்சர்
பதவியில் நீடிக்கிறார்?
நான் இருந்து உழைத்துக் கொடுத்தது போல் இன்றுள்ளவர்கள் யார் திமுகவிற்கு உண்மையாக உழைக்கிறார்கள் ? இன்று வந்து சேர்ந்துள்ள அமைச்சர்கள் எல்லாம் திமுகவிற்கு தியாகம் செய்தவர்களா ?
வேறென்ன நான் சுயமரியாதைக்காரன். என் மனதில் பட்டதை சொல்லுவேன் சில விஷயங்களை சரி தவறு என்றே எடுத்துரைப்பேன், இதுதான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவனவன் சத்தமில்லாமல் சம்பாதிக்கிறான் என்பதற்கு நான் என்ன செய்வது ? பதவிக்கும், பொருளுக்கும் என்ன செய்தும் கால் பிடிக்கும் தந்திரம் எனக்கு தெரியாது. கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் அதற்கு உண்மையாக இருப்பது என்பதைத் தவிர நான் வேறு ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. அதற்குரிய மரியாதை கிடைக்கும் என்று தான் நான் பொறுத்து இருந்தேன். தன்மானத்தோடு கட்சி பணி ஆற்றுபவர்களை எல்லாம் நீக்கிவிட்டு தன் விசுவாசிகளை மட்டும் காப்பாற்றுவதில் என்ன தந்திரம் இருக்கிறது.
விமான நிலையத்திலோ அங்கே எங்கே சந்திப்பவர்கள் அல்லது தொலைபேசியில் பேசுகிற திமுகவினர் என்னிடம் நேரடியாக உங்களை நீக்கியது தவறு என்று வருத்தப்பட்டு சொல்லுகிறீர்களே ! நீங்கள் தலைமை இடத்தில் அல்லவா இதைச் சொல்லவும் கேட்கவும் வேண்டும்.
“இதனை இவன் செய்வான் என்று ஆய்ந்து அதனை அவன்கண் விடல்” என்பதெல்லாம் வெறும் சந்தர்ப்பவாதத்திற்கு தான் போலும் !